tamilnadu

img

அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்.... 97 பக்க பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைப்பு...

சென்னை:
அதிமுக அமைச்சர்கள் மீதான 97 பக்க ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை செவ்வாயன்று(டிச.22) காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு,துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆளுநருடனான இந்த சந்தின்போது முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. 

அதன் சுருக்கம்:
முதலமைச்சர் பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ. 6133.57 கோடி மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது. கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது. முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிஷன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதிஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிகவிலைக்கு  கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து ரூ. 875 கோடி ஊழல் செய்தது.மின்துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கி
யது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல்.உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர்காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்தது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக ரூ.20.75 கோடி லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல்  செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள். வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது  ரூ. 1950 கோடி பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல். 

சட்டத்தின் ஆட்சி
முதற்கட்டமாக முதலமைச்சர்பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் தமிழக ஆளுநரிடம் கொடுத்து 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடமை தவறிய லஞ்ச ஒழிப்புதுறை
ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, “அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக் கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர் கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் புகார் பட்டியல் ஆதாரங்களுடன் கொடுத்தாகவும் அவர் கூறினார்.

இரண்டாம் பாகம்
அதிமுக அமைச்சர்கள் மீதான இந்த ஊழல் புகார் முதற்கட்டம்தான். அடுத்த கட்ட பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

;