tamilnadu

மளிகைகடை வியாபாரி வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

சென்னை,பிப்.10- நுங்கம்பாக்கம் குமரப்பா சந்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (58). இவர்அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.  மூன்று தளங்களைக் கொண்ட அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் கடை உள்ளது. முதல் தளத்தில் குடோனும், பணியாளர்கள் தங்கும் இடமும் உள்ளது. இரண்டாம் தளத்தில் ராஜேந்திரனும், மனைவி சுமதியும் வசிக்கிறார்கள். மூன்றாம் தளத்தில் அவரது மகள் வசிக்கிறார். இந்நிலையில் ஞாயிறன்று வழக்கம் போல் ராஜேந்திரன் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுமதி கதவை சாத்தாமல் திறந்துவைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் சுமதி பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் பணத்தையும் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜேந்திரன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடைப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில்  ராஜேந்திரன் வாக்கிங் சென்றிருந்தபோது, பைக்கில் ஒரு வாலிபர் அங்கு வந்துள்ளார். வீட்டின் கதவை திறந்ததை அறிந்த அவர் உள்ளே சென்று நகையை கொள்ளையடித்துள்ளார் என்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மர்ம  வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.