tamilnadu

img

வெஞ்சினம் கொண்ட பாதங்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

தவளைக் கிண்கிணித் தாமரை சீறடி என சீவக சிந்தா மணியும், அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய, வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என சிலப்பதிகாரமும்,  அடி முதல் முடியின் காறும் அறிவுற என கம்ப ராமாயணமும் பாதங்களைக் சுட்டுகின்றது, ஆண் தெய்வங்களை பாதம் முதல் முடி வரை வர்ணிப்பதற்கு பெயர் பாதாதி கேசம், பெண் தெய்வங்களை முடி முதல் பாதம் வரை வர்ணிப்பதற்கு பெயர் கோசாதி பாதம் என்றும்  சொல்வர். ராமர் பாதம் பட்டு, கல்லாய் இருந்த அகலிகை உயிர் பெற்றாள் என ஒரு கதையுண்டு, இடதுபாதம் தூக்கி யாடும் தில்லை கூத்தனான் நடராசனுக்கு பெயரே ஆடிய பாதாம். இன்னும், உன்பாதம் சரணடைந்தேன் என ஆழ்வார்கள் பாடிய பாதங்கள் பல உண்டு.  

ஆனால் இந்த பாதங்கள் அந்த பாதங்கள்  அல்ல!

மக்கள் மன்னனான மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த பெருமாள் அவனை ஏமாற்றி விஸ்வ ரூபம் எடுத்துப் பூமியை  ஒரு அடியிலும் வானுலகை  ஒரு அடியிலும் அளந்த பின்பு மூன்றாவது அடியை அவனது தலையில் வைத்த பாத கதையும் அறிவோம். பலதிசைக ளிலிருந்து கன்னிமேரி வாழும் வேளாங்கண்ணி நோக்கி யும், அங்காள பரமேஸ்வரியைக் காண மேல்மலைய னூருக்கும், ஆதிபராசக்தியைக் காண மேல்மருவத்தூ ருக்கும்,  மாம்பழத்தை கணபதி பெற்றதால் கோபம் கொண்டு ஆண்டியாய் முருகன் நிற்கும் பழனிக்கும், சீர்காழி அருகில் உள்ள திருவிடைக்கழிக்கும், திருப்பதிக்கொ டைக்காக சென்னையிலிருந்து திருப்பதி நோக்கியும், கல்லும் மண்ணும் காலுக்கு மெத்தை என சரண கோஷ மிட்டு சபரிமலை நோக்கியும் ஆயிரமாயிரம் பாதங்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சுய வாழ்க்கை வேண்டுத லுக்காக, தங்கள்  சுற்ற பந்துக்கள்  நலனுக்காக நடந்தே செல்கின்றனர்.  

ஆனால் இந்த பாதங்கள் அந்த பாதங்கள் அல்ல!

முன் வைத்த காலைப் பின் வக்க மாட்டேன்,  உங்கள் பாதம் எங்கள் வீட்டில் படவேண்டும், உங்கள் பாதம் பட்ட இட மெல்லாம் பூ  பூக்கும், கால் போன போக்கிலே மனம் போக லாமா, கால் கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும், ஒத்தக் காலில் நிற்பது என்றும்; தத்தக்கா பித்தக்கா நாலு காலு, தானே நடக்கையிலே ரெண்டு காலு, கூனி நடக்கையிலே மூணு காலு, ஆடி ஒடுங்கியவுடன் பத்துக்காலு  எனும் வாக்கியங் களினூடாக பயணிக்கும் பாதங்கள் எத்தனை எத்தனை!

ஆனால் இந்த பாதங்கள் அந்த பாதங்கள் அல்ல.
 

படிதாண்டா பத்தினி, ஓடுகாலி என துவங்கி பொடிநடை யா போறவரே, பொறுத்திருங்க நானும் வாறேன்! உன்பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே; கொடுத்து வைத்த கொலுசே அவள் கால் அழகைச் சொல்வாயா? என திரைப் படப் பாடல்கள்  துவங்கி பாதமிரண்டில் பண்மணி சதங்கை கீதம் பாட கின்கினி ஆட என கந்த சஷ்டி கவசம் வரை பதங்கள் பன்மை கொண்டு வருகின்றன. ஆனால் இந்த பாதங்கள் அந்தப் பாதங்கள் அல்ல. இந்த பாதங்கள் அக்கினிச் சூட்டில், அடைமழையில், அகலச் சாலைகளில், ஓரடி மண்சாலைகளில், பள்ளம் கொண்ட மகடுகளில், வயல்வெளிகளில் வலிக்க வலிக்க, கொப்புளங்கள் பூத்து ரத்தம் கசிய நடக்கும் பாதங்கள். இவை அனைத்தும் பெண் பாதங்கள்தாம்;  அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  வீராங்கனைகளின் பாதங்கள். எப்படி ஒரு தடகள வீராங்கனையின் பாதம் நாட்டுக்கு பெருமை சேர்த்த பாதமோ அப்படி சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் பாதங்கள் இவை.

இந்த பாதங்கள் புறப்பட்ட இடங்கள் முக்கியமானவை. சாதியிலே சமயங்களிலே சாத்திரச் சண்டைகளிலே அபிமா னித்தலையாதீர் என சொன்ன வள்ளலார் மண்ணான வட லூரிலிருந்தும், அண்ணாமலையாரிடம் அழுதெழுந்து ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஊரான திருவண்ணாமலையிலிருந்தும் நூற்றுக்கணக்கான வீராங்க னைகள் சென்னை நோக்கி நடந்தே செல்கின்றனர். இரண்டே கோரிக்கைகள்தான் பிரதானம். ஒன்று,  பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்து: மற் றொன்று, டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்துவிதமான போதை பொருட்களை தடைசெய்!   இரண்டும் தமிழகத்தின் உயிர்நாடியான மனிதத்தை உயர்த்திப் பிடிக்கும் கோரிக்கைகள்.

 மாசில் கற்பு, நாணொடு மிடைந்த கற்பு, இகலடு கற்பு, கடவுட் கற்பு, செயிர்நீர் கற்பு, பொறையொடு மலிந்த கற்பு,  வடமின் புறையுங் கற்பு, மறம் கடிந்த அருங்கற்பு, நன்றி சான்ற கற்பு, மறுவில் கற்பு, விளங்கு நகர் அடங்கிய கற்பு, வான்தரு கற்பு, ஆரிய கற்பின் அறஞ்சால் கற்பு, காமர் கடவுளும் ஆளும் கற்பின் மீனொடு புரையும் கற்பின் நாணலது இல்லா கற்பின் கடவுள் சான்ற கற்பின் சேயிழை - என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் சுட்டும் கற்பினை வெட்டிப் பெருமையுடன் உச்சரித்தலையும் தமிழ்ச் சமூகத்தில், குழந்தை முதல் வயதான பெண்மணிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது சகிக்க முடியாத பெருங்குற்றமாய் விஸ்வரூபம் கொண்டலையும் நிலையே உள்ளது.

பாரத் மாதா கி ஜே என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கும் காலத்தில் ‘பாரதத்தின்’ நிலை என்ன? உலகப் பொருளா தார மாமன்றம் (World Economic Forum) பாலின ஏற்றத் தாழ்வு மிகுந்த நாடுகளின் தரப் பட்டியலில் இந்தியாவுக்கு 108-வது இடத்தை வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்தது மொத்தம் 144 நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி ஆய்வானது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றில் பெண்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தாகும். அதே போல் 2017-18 ஆண்டுகளுக்கான “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆய்வானது, பெண்க ளின் சமூக இணைப்பு, நீதி, பாதுகாப்பு உள்ளிட்ட 11 அம்சங் களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்டதாகும். இதுதான் ‘பாரதமாதாவின்’ நிலை!

ஆனால் பெண்கள் மீதான வன்முறைகள் நடக்கும் போதெல்லாம் அவர்கள் மீதே குற்றம் சுமத்தும் அயோக்கி யத்தனங்களும் நடப்பது இயல்பாகிறது. சமீபத்தில்கூட ஒரு நாடறிந்த இயக்குநர் மற்றும்  நடிகர் பெண்களின் நடவ டிக்கைகளே தவறுகளுக்கு காரணம் கூறும் அவலம்தான் தொடர்கிறது.  தினம் தினம் நடக்கும் சம்பவங்களை ஆணா திக்க மனோபாவம் ஒருவித குரூர திருப்தியுடன் ரசிக்கத் தான் செய்கிறது. எப்போதாவது  ஏற்படும் குற்ற உணர்வு இத்தகைய சப்பைக் காரணங்களில் ஒத்திசைந்து செல் கிறது. பச்சிளம் குழந்தை துவங்கி, மிடுக்கான உடை யணிந்த காவல் நிலையம் வரை பாதிக்கப்படும் பெண்க ளுக்கு அநீதி நடக்கும் போதெல்லாம் இப்போது பயணம் செய்யும் இந்த பாதங்களே போராட்டக் களங்களில் நிற் கின்றன.  ஆசிபாவுக்கு நடந்த கொடுந்துயரம் ஒரு பக்கம்; சாதி ஆதிக்க மனோபாவத்தால் கெளசல்யாவுக்கு நடந்த பெருந்துயர் ஒருபுறம். எனினும் சோர்ந்து கிடக்கமாட்டோம் என, துயரடைந்த பெண்களின் கோபங்களை நெஞ்சில் சுமந்து ஓங்கி நடக்கின்றன இந்த பாதங்கள்.  கொப்பு ளங்கள் வெடித்து இரத்தம் கசியும் போதும் நிற்காமல் இப்பாதங்கள் நடக்க காரணம், சமூகத்தின் அநீதிகள் மீதான வெஞ்சினம்.

மாதர்தம் தாலியறுக்கும் போதைக் கடைகளை விரட்டு வோம் என முழக்கமிடும் இப்பாதங்கள்,  இளம் விதவை கள் பெருகக்  காரணமான அரசின் கொள்கைகள்  மீது காரி உமிழ்ந்து செல்கின்றன.  டாஸ்மாக் செல்ல பணம் இல்லையெனில் மனைவியின் செருவாடு பணத்தைக்கூட களவாடும் கணவர்களை உரு வாக்க ஆண்டுக்காண்டு இலக்கு நிர்ணயிக்கும் கேவலம் வேறெங்கு உண்டு? கள்ள சரக்குகள் கலக்கப்படும் டாஸ்மாக் கடைகளால் இளம் வயதில் உயிரிழந்த, ஊன மடைந்த ஆயிரமாயிரம் மானுடர்களால் இளம் விதவை களின் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்கும் சூழலில் அவர்க ளுக்கு ஆதரவாய், மூடு டாஸ்மாக்கை என ஆவேசத்தோடு கோட்டை நோக்கி செல்கின்றன. இப்பாதங்கள்! கோட்டை கொத்தளம், ஆள் அம்பு சேனை, அதிகாரம் தொடர அனைத்திற்கும் ஆட்சியாளர்களுக்கு சாராயக்கடைகள் மூலம் வரும் பணம் ஒரு பிரதான அம்சமாய் இருக்கும் போது அவர்கள் அவ்வுளவு எளிதில் இதை மூடப்போவ தில்லை. எனினும் மூடும் வரை நாங்கள் விடப்போவ தில்லை என உயர்த்திய கையோடு, அக்கையில் வெண் கொடியோடு இன்றைய தமிழகத்தின் உண்மையான கதாநாயகிகள் மிடுக்கோடு நேர்மைச் செருக்கோடு நடக்கின் றனர். 

“நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போகவிடு முடிவைப் பார்த்துவிடு
காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு!”

 

-என்ற பழைய பாடலில் ஒரு திருத்தம் செய்து  நடக்கும் பாதங்கள் இவை.  காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்திரு என்றல்ல- போரிடு என்றே முழங்கி கோட்டை நோக்கி முன்னேறுகின்ற பாதங்கள் இவை. 

கணவன், குழந்தை, வீடு, தாய், தந்தை, மாமனார், மாமியார், சுற்றம், கால்நடைகள்- எல்லோரையும் பிரிந்து பத்து நாட்கள்,  தமிழகத்தின் நிலப்பரப்பில் வெயிலும் அடை மழையும் வாதை செய்தாலும் கடந்து செல்கின்றனர். விடியும் என்ற நம்பிக்கை மட்டுமல்ல விடிந்தே ஆகவேண்டும் என்ற உத்வேகத்தோடு! இமை திறந்து, உற்றுக்கேட்டு, கைகள் உயர்த்தி, உங்கள் பாதங்களை ஓங்கி வையுங்கள் களைத்திருந்தா லும், காயப்பட்டாலும், இரத்தம் சிந்தினாலும் சிறு புன்ன கையுடன் கடக்கும் இந்த பாதங்களோடு.

இதோ மாதர்கள் தங்கள் குழந்தைகளைக் காக்க அழைக்கின்றனர். என்ன செய்யப் போகிறீர்கள்?