கோவை, மே 30-கோவை பாரதியார் பல்கலைக்கழகவளாகத்தில் சுற்றி திரிந்த மானை நாய்கள் வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மான் உள்ளிட்டவனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்வதுவழக்கம். இந்நிலையில், புதனன்று இரவுமான் கூட்டங்கள் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் வந்துள்ளது.அப்போது, அவற்றை தெருநாய்கள் துரத்தி உள்ளன. இதில், சிக்கிய ஒரு மானை மடக்கி பிடித்து நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதனால், பலத்த காயமடைந்த அந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பலியான மானை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.