தருமபுரி, ஜூலை 16- தருமபுரி அருகே ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், சிங்கம்பட்டி அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மீனா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரி யில்லாத காரணத்தால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். விடுப்பு முடிந்து ஆசிரியை மீனா பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு நான்கு மாத ஊதியத்தில் இரண்டு மாதம் ஊதியம் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீனா தருமபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் குமரேசன் என்பவரை அனுகி கேட்டுள்ளார். அதற்கு குமரேசன், வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணி அவர்களுக்கு ரூ.3 ஆயிரம், தனக்கு ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் இரு மாத ஊதியத்தை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் தர விரும்பாத ஆசிரியை மீனா தனது கணவருடன் சென்று தருமபுரியில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளனர். ஆசிரியை மீனா பணத்தை வட்டார கல்வி அலுவலகத் தில் உள்ள குமரேசன் மற்றும் வட்டார கல்வி அலுவ லர் மேரி சகாயராணிக்கு வழங்கியுள்ளார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். வட்டார கல்வி அலுவலக உதவியாளர் குமரேசனிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். லஞ்ச வழக்கில் சிக்கிய வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணி பதவி ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று மாத காலமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.