ஈரோடு, செப். 9- சென்னிமலை பகுதி நெசவாளர்கள் ரொக்கமாகக் கூலி வழங்க ஆவண செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியில் உள்ள இரண்டு தறிப்பட்டறைகளில் சுமார் 726 உறுப்பினர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரு கின்றனர். பெட்சீட் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந் நெசவாளர்கள் சுமார் 40 ஆண்டு காலமாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அதாவது வாரம் இரண்டு தவணையாக கூலியை ரொக்கமாகப் பெற்று வந்தார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரம் ஒரு முறை மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. அதுவும் ரூ.1500 வரை மட்டுமே கையில் பணமாகத் தரப்படுகிறது. மீதி தொகை வங்கியில் போடப்படுகிறது. இந்நிலையில், தினசரி குடும்பச் செலவுகளை சமா ளிக்க கூலி பணத்தை ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும். வங்கிகளில் சென்று பணம் எடுத்து வர வேண்டும் என்றால், ஒரு நாள் வேலை போய் விடுகிறது. இதனால் 300 முதல் 350 ரூபாய் வரை கூலி இழப்பு ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு வாரம் இரண்டு தவணையாக கூலித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெசவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று மனு அளித்துள்ளனர். முன்னதாக, இதேகோரிக்கைக்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.