tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினா: குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலய உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.என் பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன் அடங்கிய கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலா ரமானியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்தது.
தனது மாறுதலை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  தஹில் ரமானி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என கொலிஜியம் தெரிவித்து மீண்டும் இடமாறுதலைப் பரிந்துரைத்தது.
அதேபோன்று மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை (60) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்தது.
தஹில் ரமானியை சென்னை யில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
இந்தநிலையில் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து வி.கே. தஹில் ரமானி தனது பதவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நேற்று இரவு அனுப்பி வைத்துள்ளதாகவும், இதன் பிரதியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.