கிராமப்புற இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் கோ.வீரய்யன் அவர்கள், தமிழக கிராமப்புறத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டவும், அவர்களின் உரிமைகளுக்காக போராடவும் தன் வாழ்நாளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அயராது பாடுபட்டவர். 1979 ஆம் ஆண்டு வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 23 ஆவது மாநாட்டின் போது தோழர் ஜி.வீ.யுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அது முதல் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சித்தாடியில் குத்தகை விவசாயி குடும்பத்தில் பிறந்து, 4 ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவர். ஆனால் தனது விடா முயற்சியால் மார்க்சியம் கற்றதோடு அதை களத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டவர். அவர் எளிமையை கடைப்பிடித்ததுடன் அடக்கமான வாழ்வை மேற்கொண்டார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதிலும் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதைப் போல அல்லாமல் எளிமையாக மற்றவர்களிடம் அணுகுவார். நான் பலமுறை அவருடன் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் உண்டு. தனக்கு சட்டமன்ற உறுப்பினர் ‘பாஸ்’ உள்ளது எனக் கூறினாலும் அவரின் தோற்றம் எளிமையைப் பார்த்து நம்பாமல், பாஸை காட்டுங்கள் என நடத்துநர் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டுதான் பயணம் செல்ல அனுமதிப்பதுடன் வருத்தமும் தெரிவித்த பல சம்பவங்கள் உண்டு.
தமிழகம் முழுவதும் பஸ்ஸில்தான் பயணம் செய்வார். வெளி மாநிலங்களுக்கு கூட்டங்களுக்கு செல்லும்போது மட்டும்தான் ரயில் பயணம். சட்டமன்ற உறுப்பினராக உள்ளபோதும், சட்டமன்ற விடுதியில் வி.ச. மையப் பணியில் உள்ள போதும், சட்டமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் எங்கெங்கு குறைவான செலவில் டிபன் கிடைக்கும், சாப்பாடு கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அங்குதான் சாப்பிட செல்வார். பெரும்பாலான நேரங்களில் தோழர் வி.ஏ.கருப்புசாமிதான் அவருடன் செல்வார். எந்த ஆடம்பர ஓட்டலுக்கும் சென்றதை நான் கேள்விப்பட்டதில்லை. கிராமப்புற ஏழைகளிடம் சந்தாவாக, நிதியாக பெற்ற பணம். எனவே, சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என இருவரும் கூறுவார்கள். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே கட்சி அலுவலகம் இருந்தால் அங்கு தான் துண்டை விரித்து படுப்பார். கட்சி அலுவலகம் இல்லாவிடில் தோழரின் வீடுகளில்தான் தங்குவார். வசதிகளை எதிர்பார்ப்பதும் இல்லை, கேட்டதும் இல்லை.
தோழர்களின் திறன் அறிந்து அவர்களிடம் வேலைகளை நம்பி ஒப்படைப்பார். அதில் உள்ள குறைகளை கண்டறிந்து, தனியாக கூறி திருத்தி அமைப்பார். ஊழியர்களை சிறந்தவர்களாக உருவாக்கிட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார். கிராமப்புற இயக்க வரலாற்றை, அனுபவத்தை ஊழியர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக விவசாயிகள் இயக்கத்தின் வீரவரலாறு, சங்கம் படைத்த சரித்திரம், நிலச் சீர்திருத்தம் போன்ற எண்ணற்ற பிரசுரங்களை எழுதினார். தனது வாழ்வைப் பற்றி எழுதும்போது, செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்றே எழுதினார். தமிழ்நாட்டில் மழைவாழ் மக்கள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணைத் தொழிலாளர்கள் சங்கம் அமைத்திட அவரின் முயற்சி முக்கியமானது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தில் பொறுப்பேற்று செயல்பட்டவர். அகில இந்திய கமிட்டி கூட்டம் முதல் மையக் கூட்டம் வரை அனைத்திலும் காலத்தே பங்கேற்பதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அளிப்பார். அது இயக்க வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். தோழர் வீரய்யன் மறைவு இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
- ஜி.மணி
மத்திய செயற்குழு உறுப்பினர், அ.இ.வி.தொ.ச.
எளிய மக்களின் நாயகன் தோழர் கோ.வீரய்யன்
மலரினுல் பொதிந்து கிடக்கும் தேனை தனது கடின உழைப்பால் ஒன்று சேர்க்கும் தேனீக்களைப் போல் மனித சமூகத்துக்குத் தேவையான மார்க்சியத்தை தனது கடின உழைப்பால், எளிய வாழ்க்கையால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மகத்தான தலைவர் ‘ஜிவி’ என அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் கோ.வீரய்யன். தனது 86-ஆவது வயதில் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் விட்டுச் சென்ற தடங்கள் கிராமப்புற இயக்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். திருவாரூர் மாவட்டம் சித்தாடி கிராமத்தில் குத்தகை விவசாயிகள் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் ஜிவி. செருகளத்தூர் பண்ணை நிலத்தில் 4 ஏக்கர் குத்தகை விவசாயம் செய்தார். தனது 16-ஆவது வயதில் 1948-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1964-ல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது அதில் இணைத்துக் கொண்டு கட்சியைக் கட்டுவதில் முனைப்பாக பணியாற்றினர். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும் வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்தார். நான்காவது வரை மட்டுமே படித்திருந்த போதும் மார்க்சிய சித்தாந்தத்தை ஆழமாக கற்று எளிய மொழியில் பாமர மக்களுக்கும் புரியும்படி விளக்கினார். இவரின் எளிய அணுகுமுறையும் விவாதத் திறமையும் பலரை கட்சிக்குள் ஈர்த்தது. ஊழியர்களை உருவாக்குவதில், வளர்த்தெடுப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தியவர் தோழர் ஜிவி.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட கமிஷனில் உயர்மட்டக்குழு உறுப்பினராக இருந்து சிறு, குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் முனைப்போடு செயல்பட்டார். தோழர்களின் பிரச்சினைகளைப் புரிந்துக் கொண்டு, அவர்களின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வழிகாட்டுவார். உதாரணமாக தியாகி என்.வெங்கடாசலம் எதிரிகளால் கடத்திக் கொல்லப்பட்ட பிறகு அவரின் 3 மகன்களையும் கட்சி அலுவலகத்தில் தங்க வைத்து படிக்க வைத்தது தோழர் ஜிவியின் பாச உணர்வுக்கு எடுத்துக்காட்டாகும்.
60 ஆண்டுகால பொது வாழ்வில் 15 ஆண்டுகள் நன்னிலம் வட்டத்திலும், 18 ஆண்டுகள் மாவட்ட மையத்திலும், 27 ஆண்டுகள் மாநில மையத்திலும் சிறப்பாகப் பணியாற்றினார். கிராமப்புறத்தில் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அணி திரட்டுவதில் மகத்தான பங்களிப்பைச் செலுத்தினார். விவசாயத் தொழிலாளர்களின் மாநில அமைப்பை உருவாக்குவதிலும், 1992-ல் மலைவாழ் மக்கள் அமைப்பை உருவாக்குவதிலும் 1987-களில் கரும்பு விவசாயிகளைத் திரட்டுவதிலும் பெரும் பங்காற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் 10 ஆண்டுகள் பொதுச் செயலாளராக பணியாற்றினார். இரண்டரை ஆண்டுகள் சிறைவாசமும், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார். தோழர் ஜிவி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போது 1990-ல் நிலச் சீர்திருத்தம் தொடர்பாக தனி மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், நில சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை விளக்கிய விதம் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து உறுப்பினர்களாலும் பாராட்டப்படக் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சியிலும் விவசாயிகள், விவசயாத் தொழிலாளர்கள் சங்கங்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றிய அருமைத் தோழர் ஜிவியின் முதலாமாண்டு நினைவு தினத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தை வலுவாக கட்டி வளர்ப்பது தான் அவருக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலியாகும்.
-எஸ்.சங்கர்
மாநிலப் பொருளாளர், அஇவிதொச
இன்று (நவ.18) தோழர் கோ.வீரய்யன் முதலாமாண்டு நினைவுநாள்