லக்னோ, ஜூலை 2 -
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸின் புறநகர் பகுதியான புல்லெரா என்ற கிராமத்தில் போலோ பாபா என்ற இந்து மத சாமியார் செவ்வாயன்று மதச்சொற்பொழிவு நடத்தினார்.
“மங்கள் மிலான் சத்பவன சமாகன்” என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
குறுகிய இடத்தில் அளவுக்கு அதிகமானோர் குவிந்த நிலையில், கூட்டம் கூடும் பொழுதே லேசான அளவில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை விழா ஏற்பாட்டுக் குழு கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிவடைந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, இந்த நெரிசலில் சிக்கி 40 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.