புதுச்சேரி, ஜூலை 9- கொத்தம்புரி நத்தம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னாடிபட்டு கொம்யூன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரி நத்தம் மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்ய வேண்டும். கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும். தலித் மக்களுக்கான கரும காரிய கொட்டகையை அமைத்துக் கொடுக்க வேண்டும். கிராமத்திற்கு செல்லிப்பட்டு, ரசபுத்திர பாளையம் வழியாக பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். 100 நாள் வேலையை உடனடியாக துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னாடிபட்டு கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ராஜாங்கம், பிரதேசக் குழு உறுப்பினர் சங்கர், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பிரதேசத் தலைவர் வடிவேலு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கொம்யூன் குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, விநாயகம், முத்து, நாகராஜ், கிளைச் செயலாளர் பெரியசாமி உட்பட அப்பகுதி மக்கள் திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.