states

img

திறந்தவெளி குடிப்பகமாக மாறிய பெருமாள் நகர்

புதுச்சேரி, ஏப். 17 - சேதராப்பட்டு அருகே திறந்தவெளி பாராக (குடிப்பகமாக) பெருமாள் நகர் மாறியுள்ளது. சாலைகளில் காலி மது பாட்டில்களை உடைத்து சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர். சேதராப்பட்டு - திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு செல்லும் சாலையில் தமிழக பகுதியான பெருமாள் நகரில் குடியிருப்புகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் உள்ளது. இந்த பகுதியில் சேதராப்பட்டு தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே தங்கியுள்ளனர். பெருமாள் நகரில் 5க்கும் மேற்பட்ட குறுக்கு சிமெண்டு சாலைகள் உள்ளது. இந்தப் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் இரவு 12 மணி வரை தினசரி 100க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. சேதராப்பட்டில் பணி முடித்துவிட்டு அந்த வழியாகத்தான் பெண்கள் பாப்பான்சாவடி, ஆகாசம்பட்டு ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் அங்கு மது அருந்துபவர்களால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது அருந்துபவர்கள் காலி மது பாட்டிலை சாலையிலேயே உடைத்து போடுகின்றனர். இதனால் அங்கு செல்லும் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுகிறது. காவல் துறையினர் கண்காணிப்பில் இல்லாத பகுதி இது என்பதால் மது மட்டுமல்லாமல், இளைஞர்கள் கஞ்சா புகைப்பதாகவும், போதை ஏறிய பின்னர் பலர் மோதிக் கொள்வது என சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த வழியாக வரும் வட மாநிலத் தொழிலாளர்களை சிலர் போதையில் தகாத வார்த்தையால் பேசுவதும் நடைபெறுகிறது. எனவே ஆரோவில் மற்றும் வானூர் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியினை அந்த வழியாக தினசரி மேற்கொண்டால் அங்கு மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறையும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.