புதுதில்லி, மார்ச். 14- உச்சநீதிமன்ற கண்டனத்தால் எஸ்பிஐ வங்கி செவ்வாயன்று மாலை தேர்தல் பத்திர திட்டத்தின் அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த நிலையில், புதனன்று தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. முன்னதாக தேர்தல் பத்திர விவரங்களை வெள்ளிக்கிழமைக்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வியாழனன்று இரவு 8 மணி அளவில் தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.