states

செட் தேர்வை உடனே நடத்திட ம.சு.பல்கலை.க்கு மாணவர்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி, ஜூன் 27- செட் நுழைவுத் தேர்வினை இனியும் தாமதிக்காமல் உடனே நடத்திட கோரி இந்திய மாணவர் சங்கம் ம.சு. பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டம் அபிஷேகப் பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளரை இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர்,  ஷம்சீர் அகமது மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள் ஆகியோர் வியாழக்கிழமை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது - ம.சு. பல்கலைக்கழகம் அரசு/உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக மற்றும் ஆராய்ச்சி படிப்பினை தொடருவதற்கான மாநில தகுதி நுழைவுத் தேர்வினை செட் (SET) இந்த ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு நடத்த அனுமதி பெற்று உள்ளது. இதில் 2024ஆம் ஆண்டுக்கான செட் தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு மாணவர்கள் தயாராகி வந்த நிலையில், தேர்வு நாட்களுக்கு (7,8 .06.2024) ஒருநாள் முன்னதாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு இணைய வாயிலாக நடத்த இருந்த ஒப்பந்த நிறுவனம் தொடர்பான குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுகிறது என்ற காரணம் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதியில்லாத நிறுவனத்தினை தேர்வு செய்த நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், மாநில நுழைவுத் தேர்வானது ஆராய்ச்சிப் படிப்புக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் அதற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்டு பல அரசு தேர்வுகள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் நுழைவுத் தேர்வினை விரைந்து நடத்திடவும், அதற்கான அறிவிப்புகளை உறுதி செய்து உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் இந்திய மாணவர் சங்கம்  சார்பில் வலியுறுத்துகின்றோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.