புதில்லி, மார்ச் 21- “பாஜக-வைத் தோற்கடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அணிக்கு யார் தலைமை என்பது, இப்போது தேவையற்றது” என்று நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் கூறியுள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து விலகி, தனியாக, ‘லோக் தந்தரிக் ஜனதா கட்சி’யை நடத்திவந்த சரத் யாதவ், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஞாயிறன்று தனது கட்சியை, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் இணைத்தார். அப்போது இந்த இணைப்புக்கான காரணங்களை விளக்கி அவர் பேசினார். அதில், ‘‘இன்றைய நிலையில், மதவாத சக்திகளை எதிர்க்க நாட்டில் பலமான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்திலும் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்துசென்ற பலரும் ஒன்றாக சேரவேண்டும் என்ற அடிப்படையிலும் லோக் தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைக்க முடிவு செய்தேன்” என்று குறிப்பிட்டார். மேலும், தனது இணைப்பு முடிவு மக்களின் கோரிக்கையாகும். இது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அளித்துள்ளது. இது சிறந்த நேரம். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கை இது. பாஜக-வை தோற்கடிக்க நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும். 2019-ஆம் ஆண்டே (மக்களவைத் தேர்தலில்) நாம் ஒன்றிணைந்திருக்க வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து போராட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷூடனும் நான் பேசுவேன்’’ என்றும் தெரிவித்தார்.