states

img

மருந்துக்குள் ஒளிந்திருக்கும் பணம்

கோவிட் பெருந்தொற்றின்போது, உயிர்காக்கும் மருந்தாக மக்கள் மிக வும் நம்பியது ரெம்டெசிவிர். ஸைடஸ் நிறுவனம் தயாரித்த அந்த  ரெம்டெசிவிர் மருந்துகளில் பாக்டீரியா நச்சுகள் இருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வேறு பல புதிய உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்த நிறுவனத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், இந்தப் பிரச்சினைக்குப்பின் அந்த நிறுவனம் 2022 அக்டோபரில் ரூ.18 கோடியை தேர்தல் பத்திரங்களாக பாஜகவிற்கு வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சிப்லா தயாரித்த இருமல் மருந்து தரக் குறைவாக இருப்பது 2018 ஆகஸ்டில் வெளிப்பட்டது. 2019 ஜூலையில் ரூ.7 கோடியும், அக்டோபரில் ரூ.8 கோடியும் சிப்லா நிறுவனம், தேர்தல் பத்திரங்களாக பாஜகவுக்கு வழங்கியது. 

கொரோனாவுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தினை சிப்லா நிறுவனம் தயாரித்ததில் அளவுக்குறைவு போன்ற குறைபாடு கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜூலை 2021இல் மட்டும் 2 எச்சரிக்கைகள் விடுக்கப் பட்டன. 2018இலிருந்து 2022க்குள் ஆறு விளக்கம் கேட்கும் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. 2022 அக்டோபரில் சிப்லா நிறுவனம் ரூ.22 கோடியை தேர்தல்  பத்திரங்களாக பாஜகவுக்கு அளித்தது. இந்தத் தவறுகளுக்கெதிராக அறிவிப்பு கள் அளிக்கப்பட்டாலும், சிப்லா நிறுவனத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தரக் குறைவான மருந்துகளைத் தயாரிப்பதாக க்ளென்மார்க் நிறுவனத்திற்கு 2022-23இல் மட்டும் 5 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு நோட்டீஸ்களை பாஜக ஆளும் மகாராஷ்ட்ராவின் உணவு, மருந்துத் துறை விடுத்திருக்கிறது. குறிப்பாக இந்த நிறுவனம் தயாரித்த இரத்த அழுத்த மருந்து, கரைதல் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை. 2022 நவம்பரில் இந்த நிறுவனம் ரூ.9.75 கோடிகளை தேர்தல் பத்திரங்களாக பாஜகவுக்கு வழங்கியது. கண்டுபிடிக்கப்பட்ட குறைகளுக்கு எதிராக அதன்பின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஐபிசிஏ லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் தயாரித்த பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான மருந்தில், அதன் கலவையில் இருக்க வேண்டிய ஒரு மருந்தின் அளவு குறைவான விகிதத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனம் நவம்பர் 2022இல் பாஜகவுக்கு ரூ.10 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கியது. அதாவது, ஒரு நிறுவனத்தில் குறைகள் இருந்தால் அதைச் சரி செய்ய வேண்டிய அவசியமில்லை. பாஜகவுக்கு நிதியளித்தால் மட்டும் போதும். அது மருந்து நிறுவனமாக இருந்து, அது தயாரிக்கும் மருந்துகளால் மக்கள் உயிரிழந்தாலும் அதைப் பற்றி பாஜக அரசுக்குக் கவலை இல்லை. இதய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் இனாப்ரில்-5 என்ற மருந்தை இண்டாஸ் ஃபார்மசூட்டிகல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மருந்து தரச் சோதனைகளில் தோல்வியுற்றதாக மகாராஷ்ட்ரா உணவு, மருந்துத் துறை அறிவிக்கிறது. அந்த நிறுவனம் 2022 அக்டோபரில் பாஜகவுக்கு ரூ.20 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அளிக்கிறது.