சென்னை,ஜூலை 30- 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30 ஞாயி றன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. இதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஜூலை 30 ஞாயிறன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிஎஸ்-சார் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும்.. இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்-2, நியூலயன், கலாசியா, ஆர்ப்-12 ஸ்டிரைடர் ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன. இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பயன்படும்.