states

தேசிய குடும்ப நல ஆய்வில் ரத்தசோகை கணக்கெடுப்பை நீக்கிய ஒன்றிய அரசு

மாதர் சங்கம்  கடும் கண்டனம்

புதுதில்லி,ஜூலை 26- பெரும்பாலான பெண்கள்,குழந்தைகள் பாதிப்பை மூடிமறைக்க தேசிய குடும்ப நல ஆய்வில் ரத்தசோகை  குறித்த கணக்கெடுப்பை நீக்கிய  ஒன்றிய பாஜக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே.ஶ்ரீ மதி, பொதுச்செய லாளர் மரியம் தாவ்லே ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:  நாட்டு மக்களுக்கு தேவையான சுகாதார திட்டங்களை வகுப்பதற்காக ஒன்றிய சுகாதாரம்-குடும்ப நல அமைச்சகத்தால் தேசிய குடும்ப நல ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய ஆறாவது தேசிய  குடும்ப நல ஆய்வில் (NFHS-6) இரத்த சோகை குறித்தான தகவல்களை கண்டறியும் முறையை ஒன்றிய பாஜக அரசுநீக்கியுள்ளது. இதற்கு முந்தைய  கணக்கெடுப்பில் (NFHS-5) இந்தியாவில் 57 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும் 67 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அதிகளவிலான பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதித்துள்ள இரத்த சோகையை  ஒரு சாதாரண பிரச்சனையாகவோ அல்லது ஒரு தனியான  நிகழ்வாகவோ  நிராகரிக்க முடியாது. இது தாய் மற்றும் குழந்தையின் இறப்புக்கு பெருமளவு காரணமாக இருந்து வருகிறது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . இது குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுப்பதோடு  அவர்களின் ஆரோக்கியத்தை பாதித்து, நீண்டகாலத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும்.  பெண்கள் மற்றும் குழந்தை களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. இதனால் இளம்பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. 

இவ்வாறான மோசமான சூழலில், கணக்கெடுப்பில் இருந்து இரத்த சோகை குறித்தான தரவை  நீக்குவது என்ற முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. இரத்த சோகையின் அளவு மாநிலங்களுக்கு மாநிலமும் மாவட்ட அளவிலும் வேறுபடுகிறது.  மாவட்ட அளவில் இந்த தகவலைக் கொண்ட தரவை வழங்குவது  தேசிய குடும்ப நல ஆய்வு ( NFHS) மட்டுமேயாகும். இத்தகைய முறையான அளவீடுகள் இல்லாமல், சுகாதார தலையீட்டிற்கான தேவை எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிவியல் பூர்வமாக மதிப்பிட முடியாது. கடந்த கணக்கெடுப்பில், குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிகளவிலான பாதிப்புகள் இருப்பது பட்டியலில்  காட்டப்பட்டுள்ளது. இரத்த சோகை பிரச்சனையை மூடி மறைக்க ஒன்றிய  அரசு முயற்சிக்கிறது.  கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறியதாலும், எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இல்லாததாலும், மக்கள் தொடர்பு மேலாண்மை, பொது சுகாதார மேலாண்மையின் நோக்கத்திற்கு எதிராக ஒன்றிய அரசின் நடவடிக்கை உள்ளது.

இரத்த சோகை தொடர்பான தரவுகளை நீக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு  ஈடுபட்டுள்ள அதே சமயத்தில், நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசியை  அறிமுகப்படுத்த தயாராக உள்ளது . இந்த விஷயத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதில் உள்ள ஒன்றிய அரசின் ஆர்வம், நாட்டில் இரத்த சோகை பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை அளவிடுவதற்கும், அதை சரி செய்வதற்கும் இல்லை.  எனவே, தேசிய குடும்ப நல ஆய்வில் (NFHS -6) இருந்து இரத்த சோகை குறித்தான கணக்கெடுப்பை  நீக்கும் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  ரத்தசோகை குறித்தான கணக்கெடுப்பை எந்த தாமதமும் இன்றி மீண்டும் துவக்க  வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசியை  அவசர அவசரமாக அறிமுகப்படுத்தக் கூடாது. இரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாட்டை சரி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.