states

img

ஜமாத்-இ-இஸ்லாமி - பாஜக நிழல் கூட்டணி - முகமது யூசுப் தாரிகாமி பேட்டி

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படையான பொதுவான போக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பான ஜம்மு-காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பாஜகவின் இரகசிய உறவை சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி விளக்கினார். குல்காம் தொகுதியில் மதச்சார்பற்ற கட்சிகளின் வேட்பாளரான தாரிகாமி ‘தேசாபிமானி’ தில்லி செய்திப் பிரிவின் தலைவர் சாஜன் எவுஜுக்கு அளித்த பேட்டியில் இருந்து. ஜம்மு - காஷ்மீரில் கடந்த காலத்தை விட வாக்குப்பதிவு சதவிகிதம் 

அதிகமாக உள்ளதே?

ஜம்மு-காஷ்மீரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தல் நடந்தது; 2018 முதல் சட்டப் பேரவை இல்லை. ஜம்மு-காஷ்மீரில் அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் நம்பிக்கையைப் பெற ஆலோசனை நடத்தாமல், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆவது பிரிவு 2019 இல் நீக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்படுவது இல்லை. இதுவே முதல் முறை. இது ஒன்றிய அரசுக்கும் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலையீடு, நாட்டின் பிற பகுதிகளில் எழுந்துள்ள மக்கள் கருத்து மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக, ஜம்மு -காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு பாஜக அரசு தள்ளப்பட்டுள்ளது. இது ஜம்மு - காஷ்மீர் மீதான ஒன்றிய அரசின் பிடி தளர்வதற்கும் வழிவகுத்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் இந்த தேர்தலில் பெருமளவில் வாக்குப்பதிவு நடந்தது உண்மைதான். மக்கள் தங்கள் கருத்தைக் கூற வேறு வழியின்றி தவிக்கும் நிலை இதுவாகும். அவர்கள் ஒன்றுதிரண்டு வாக்குச்சீட்டு மூலம் பதில் அளித்தனர். 2019க்குப் பிறகு இங்கு அமைதி திணிக்கப்பட்டது. மக்களின் உரிமைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் நாட்டில் உள்ள குடிமை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறையைக்கூட  ஆதரவாக மாற்ற பாஜக முயற்சித்தது. குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட ஜம்மு பிராந்தியத்தில் ஆறு புதிய தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட காஷ்மீரில் ஒரு இடம் மட்டுமே அதிகரிக்கப்பட்டது.

மதச்சார்பற்ற அணி  திறம்பட செயல்பட்டதா?

இத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்தது. முதலில் ஜம்முவில் ஒரு இடத்திலும், காஷ்மீரில் இரண்டு இடங்களிலும் போட்டியிட சிபிஎம் முடிவு செய்தது. தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் கலந்துரையாடிய பின்னர், குல்காமில் மட்டுமே போட்டியிட சிபிஎம் முடிவு செய்தது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரிவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 1996 முதல், குல்காம் தொகுதியில் சிபிஎம் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மக்களை அவமதித்த பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மதச்சார்பற்ற கட்சிகளின் பரந்த கூட்டணி தேவை என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ளது.

தேர்தலை பாஜக எப்படி எதிர்கொண்டது?

அவர்களின் செயல்பாடுகள் பின்வாசல் வழியாக இருந்தது. அவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். மக்களின் ஒற்றுமையை உடைக்க முயன்றனர். பழைய நிழல் கூட்டணிக் கட்சிகளுடன், ஜம்மு - காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பொறியாளர் ரஷீத்தின் அவாமி இத்தேஹாத் போன்ற புதிய நிழல் பங்காளிகளையும் தேடிப்பிடித்தனர். ஜமாத்-இ-இஸ்லாமி இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடவில்லை. 1972இல் நான் சிறையில் இருந்தேன். தேசிய மாநாடு தடைசெய்யப்பட்டது. அந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட ஜமாத்-இ-இஸ்லாமி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. இவற்றில் இரண்டு குல்காம் பகுதியைச் சேர்ந்தவை. 1977இல் அவர்களுக்கு ஒரு இடம் மட்டும் கிடைத்தது. 1987-லும் இதுதான் நிலைமை. 1996 தேர்தலில் என்சிபிக்கும் சிபிஎம்-க்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். பின்னர் அவர்கள் பிடிபியை ஆதரித்தனர். இப்போது முதன்முறையாக ஜமாத்-இ-இஸ்லாமி தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசுடன் ஆலோசனை நடத்தினர். இது ஊடகங்களில் வந்துள்ளது. இறுதியில் அவர்கள் சுயேச்சைகளாக போட்டியிட ஒப்புக்கொண்டனர். தடை முறையாக நீக்கப்படவில்லை. ஜமாத்-இ-இஸ்லாமி போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்று குல்காம், அங்கு அவர்கள் முழு பலத்துடன் பிரச்சாரம் செய்தனர். மற்ற இடங்களில் போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிபிஎம் வேட்பாளராக நான் போட்டியிட்ட குல்காமில் ஒன்றிய அரசு ஜமாத்-இ-இஸ்லாமியை ஊக்குவித்து வசதிகளை செய்து கொடுத்தது.

ஜமாத்-இ-இஸ்லாமி சிபிஎம்மை ஏற்கனவே எதிர்ப்பவர்கள். ‘ஜிஹாதிஸ்டுகள்’ என்று அழைக்கப்படுபவர்களின் ஒரு பகுதியாக இருந்தவர்கள். அவர்கள் அரசமைப்பை நிராகரித்து, தேர்தலில் பங்கேற்பவர்களை தாக்கி கொன்றனர். 1989 முதல் ஜம்மு - காஷ்மீர் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானுடன் இணைக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ‘இந்திய ஆக்கிரமிப்பு’ என்ற வாதத்தையும் கையில் எடுத்தனர். இப்போது ‘யு-டர்ன்’ (எதிர் திசை) எடுத்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் பல தசாப்தங்களாக இரத்தம் சிந்தியதற்கு ஜமாத்தே இஸ்லாமி பொறுப்பேற்க வேண்டும். கொடூரமான குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இப்போது எவ்வாறான நிலைமைகளின் கீழ் இந்த நிலைமாற்றம் செய்யப்பட்டது, எவ்வாறான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

பாஜகவின் இந்த இரட்டை வேடம் தீர்ப்பை பாதிக்குமா?

சிபிஎம், தேசிய மாநாடு(என்சி), ஜம்மு காஷ்மீர் பிடிபி உள்ளிட்ட முக்கிய கட்சிகளை ஒன்றிய அரசு வேட்டையாடுகிறது. இந்த கட்சிகள் இரத்தக்களரிக்கு பலியாகின்றன. மறுபுறம் பிரிவினைவாதிகளை ஒன்றிய அரசு சமாதானப்படுத்தி வருகிறது. குடியரசுக்கு எதிராக ‘ஜிஹாத்’ நடத்தியவர்களுடன் ஒன்றிய அரசு வெளிப்படையாக கைகோர்த்தது. இதை நாட்டு மக்களும் ஜனநாயக சக்திகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜமாத் - இ - இஸ்லாமியும் ஒன்றிய அரசும் போடும் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும். நீண்ட காலமாக மேற்கொண்டுவரும் உறுதியான நிலைப்பாடு, குல்காமில் செய்துள்ள வளர்ச்சி நடவடிக்கைகள், தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் ஜனநாயக பிரச்சனைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டன. இது குல்காம் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பாஜகவின் இணையான நிகழ்ச்சி நிரல் மக்களிடம் விளக்கப்பட்டது. கடந்த நான்கு முறை வெற்றி பெற்றிருந்தாலும், இந்தத் தேர்தல் புதிய அனுபவமாக அமைந்தது. மக்களைக் கவர்ந்த பிரச்சாரத்தால் நல்ல வாக்குப்பதிவு இருந்தது. காஷ்மீரின் மொத்த முடிவுக்காக காத்திருக்கிறோம்.