புதுதில்லி,மார்ச் 1- வாகன விபத்தில் பலியாவோர் குடும்பத் துக்கு இழப்பீடு 2 லட்சம் ரூபாயாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய சாலை போக்கு வரத்து- நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகன விபத்தில் சிக்கு வோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியிடப் பட்ட அறிவிக்கையின்படி, வாகன விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கான இழப்பீடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதுபோல காயமடைந்தோருக்கான நிவாரணத் தொகை ரூ.12,500 இல் இருந்து ரூ.50 ஆயிரமாகக உயர்த்தப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் வாகன விபத்தில் பாதிக் கப்பட்டவர்களிடமிருந்து இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்து கள் ஏற்பட்டதாகவும் இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்ததாகவும் அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.