states

தில்லியில் இன்று தொழிலாளர் - விவசாயிகள் மாபெரும் மாநாடு

புதுதில்லி, ஆக. 23 - தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமையின் ஒரு பிரம்மாண்டமான, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தலைநகர் தில்லி இன்று (ஆகஸ்ட் 24) காண இருக்கிறது. சம்யுக்த கிஷான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தில்லியில் உள்ள தல்கத்தோரா அரங்கத்தில் எழுச்சிமிகு கூட்டுப் போராட்ட அறிவிப்பு மாநாட்டினை நடத்துகின்றன.  தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் அமைப்புகளின் சார்பில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நாடு முழுவதுமிருந்து பங்கேற்கிறார்கள். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகள் - தொழிலாளர்கள் உள்ளிட்ட  பாட்டாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை  எதிர்த்தும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் மூல தனத்திற்கு சேவகம் செய்யும் விதத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்தும் வரும் நாட்களில் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியையும் போராட்டங்களையும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவின் இருபெரும் வர்க்க சக்திகளான தொழிலாளர்களும் விவசாயிகளும் வலுவான முறையில் முதன்முறையாக கரம் கோர்க்கிறார்கள். இதற்கு முன்பும் தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒன்றிணைந்து போராடியுள்ளன. என்ற போதிலும், அது இடதுசாரி இயக்கத்தின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் போராட்டங்களே.  ஆனால் முதன் முறையாக, இடதுசாரி இயக்கங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகளின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி(சம்யுக்த கிஷான் மோர்ச்சா)யும் அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டங்களுக்கு திட்டமிடவுள்ளன. அதற்காகவே தில்லியில் வியாழனன்று இந்த மாநாடு நடைபெறுகிறது.