வியாழக்கிழமை நாடாளுமன்ற வாயிலில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கியதன் காரணமாகவே பாஜக எம்.பி.,க்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் காயமடைந்ததாக தில்லி காவல்துறையில் ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. ஆனால் தள்ளுமுள்ளுவில் “இந்தியா” கூட்டணி பெண் எம்.பி.,க்கள் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மீது பாஜகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பான புகாரை தில்லி காவல்துறை ஏற்கவில்லை. இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “பாஜகவின் அரசியல் பழிவாங்கல் காரணமாக ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் அரசியல் சூழ்ச்சியால் ராகுல் காந்தி 26 எப்ஐஆர்களை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் தங்களை உடல் ரீதியாக தாக்கிய பாஜக எம்.பி.,க்களுக்கு எதிராக “இந்தியா” கூட்டணி சார்பாக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தாக்கல் செய்த எப்ஐஆர் மீது தில்லி காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.