அதிகாரிகளை உருவாக்குவதற்காகவே சைனிக் பள்ளிகள் போன்ற ராணுவ அதிகாரிகளுக்கான முன் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இந்த ராணுவச் சிறப்புப் பள்ளிகளில் மாணவர்கள் சிறு வயதிலேயே இயல்பான சமூக வாழ்க்கையில் இருந்து துண்டிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் பிராந்திய ,வர்க்க ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கு குறைக்கும் வகையில் இந்த சைனிக் பள்ளிகள் இயங்கின. ஆனால் இதையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை மோடி அரசு செய்தது. 2018ல் தேசிய ராணுவ அகாடமியில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கினர் சைனிக் பள்ளிகளில் படித்தவர்கள். பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 33 சைனிக் பள்ளிகளில் இவர்கள் படித்திருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டில் ராணுவ அகாடமியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனிக் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 25 % க்கும் மேல் இருந்தது. மோடியின் அரசு 100 சைனிக் பள்ளிகளை தனியார் நடத்த அனுமதித்துள்ளது. இதனால் ராணுவப் பள்ளிகள் இந்துத்துவா சிந்தனை கொண்ட பள்ளிகளாக வெறியூட்டப்படும் என்ற அபாயம் உள்ளது. 2024 ஜனவரி 3 இல் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேசம், பிருந்தாவனத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய பெண்களுக்கான சைனிக் பள்ளியை திறந்து வைத்தார்.
இந்தப் பள்ளியை நிறுவியவர் பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா என்பவராவார். பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தின் போது வெறித்தனமான இஸ்லாமிய விரோதப் பேச்சுகளைக் கட்டவிழ்த்துவிட்டவர் தான் இந்த ரிதம்பரா. சைனிக் பள்ளியை திறந்து வைத்த போது ராஜ்நாத் சிங், ராமர் கோவில் எழுந்ததில் ரிதம்பராவின் பங்களிப்பை புகழ்ந்து பேசினார். பஞ்சாபிலும் இதுபோன்ற தனியார் சைனிக் பள்ளிகள் நடக்கின்றன. இது போன்ற அசாதாரண போக்குகள் மிகவும் கவலை அளிப்பவை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரிலும் ,கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களிலும், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் பஞ்சாப் போன்ற பகுதிகளிலும் தான் இந்திய ராணுவம் மிக அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது; மோடி அரசு, இந்த ராணுவக் குவிப்பை திட்டமிட்டே அதிகரித்துள்ளது. ராணுவத்தை இந்துத்துவமயமாக்கும் ஆர்எஸ்எஸ்- பாஜக நடவடிக்கைகள் நாட்டுக்கு நல்லதல்ல. தானே எல்லாம் சரியாகிவிடும் என்று இந்தப் பிரச்சனைகளை புறக்கணிப்பது ராணுவத்திற்குத் தான் அபாயத்தை ஏற்படுத்தும்.