ஜூன் 4-ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகளை அறிவதற்காக உலகமே இந்தியாவை நோக்கி தொலைக்காட்சிகளில் தங்கள் கண்களை நிலை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்த நேரம். இந்தியாவின் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகள் முதல் சுற்று, இரண்டாம்சுற்று என்று ஒவ்வொரு தொகுதிகள் குறித்தும் விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பொழுது இந்திய மக்கள் அனைவரது கண்களும் உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதி குறித்து வருகிற தகவல்களை உற்றுக்நோக்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நமது தேசத்தில் ‘கடவுளின் அவதாரமான’ பிரதமர் மோடி அவர்கள் அங்கு தான் வேட்பாளராக போட்டியிட்டார். பல்வேறு அறிவிப்புகளுக்கு இடையில் வாரணாசியில் முதல் சுற்று பிரதமர் மோடி பின்னடைவில் இருக்கிறார். இரண்டாவது சுற்று பின்னடைவில் இருக்கிறார். மூன்றாவது சுற்று பின்னடைவில் இருக்கிறார். நான்காவது சுற்று பின்னடைவில் இருக்கிறார். இந்த இரண்டு மணி நேரத்தில் இந்திய நாட்டின் முக்கியமான செய்தியாக இருந்தது பிரதமர் மோடி நான்காவது சுற்று வரை பின்னடைவில் இருக்கிறார் என்கிற செய்தி தான். இது உலகத்தில் எப்படிப்பட்ட பார்வையை ஏற்படுத்தியிருக்கும் ‘கடவுளுக்கே’ இந்த கதியா?
கடவுள்தான் மனிதர்களை சோதிப்பார் என்பது பொதுவாக ஆன்மீகவாதிகளின் கருத்து. ஆனால் அந்தக் கடவுளையே இந்திய வாக்காளப் பெருமக்கள் கதிகலங்க வைத்து விட்டார்கள். ஆனால் பின்பு அந்த நிலைமை மாற ஆரம்பித்தது. ஐந்தாவது சுற்றுக்கு பின்பு மோடி முன்னிலைக்கு வர ஆரம்பித்தார். மரண வேதனையை விட மிகக் கொடூரமானதாக அந்த இரண்டு மணி நேரத்தை மோடி அனுபவித்திருப்பார். உயிருடன் இருக்கும்ஒரு மனிதரின் உடலில் ஆயிரம் ஊசிகளை குத்தி இரண்டு மணி நேரம் வைத்திருந்தால் என்ன வேதனையை அனுபவித்து இருப்பாரோ அந்த வேதனையை மோடி அனுபவித்திருப்பார். இந்திய வாக்காள பெருமக்கள் குறிப்பாக வாரணாசி தொகுதி மக்கள், இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சோதனையையும் வேதனையையும் மோடிக்கு இரண்டு மணிநேரம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அகம்பாவத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போடும் நபர்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் காலமும் மக்களும் தண்டனையை வழங்குவார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இந்த பயத்தின் காரணமாகமோடி ஜனநாயகத்தின் மீதும் மதச்சார்பின்மையின் மீதும் கை வைக்க அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஜூன் 1ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை நமது தேசத்தின் பிரதமராக இருந்த மோடி அவர்கள் ஆடிய ஆட்டமென்ன பாடிய பாட்டு என்ன என்ற கண்ணதாசனின் கவிதையின் வரிகளுக்கு உயிர் கொடுத்தது போல ஆட்டம் போட்டதை நம்மால் மறக்க முடியவில்லை.
அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்-சின் கொள்கையை அமல்படுத்தியது போல இந்த முறை அமல்படுத்துவதற்கு இந்தியா கூட்டணியும் அனுமதிக்காது; இந்திய வாக்காள பெருமக்களும் அனுமதிக்கமாட்டார்கள். உத்தரப்பிரதேசத்தையும் அங்கு உள்ள ராமர் கோயில் கட்டப்பட்டதையும் வைத்து எவ்வளவு பெரிய பிரச்சாரங்களை இவர்கள் செய்தார்கள். ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை முன்னிறுத்தி ராமனை வழிபட்டால் இந்திய மக்களின் அனைத்து கஷ்டங்களும் உடனடியாக நீங்கும் என்று ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள். அப்படி என்றால் நாடாளுமன்றத்தின் மூலம் இந்த தேசத்தை நிர்வாகம் செய்யும் ஒரு ஒன்றிய அரசுக்கு, மக்களின் கஷ்டங்களைப் போக்க எந்த பொறுப்பும் இல்லை என்று தானே அர்த்தம். நாடாளுமன்றத் தேர்தலின் போது மதத்திற்கும் ஜெய் ஸ்ரீ ராம் கோசத்திற்கும் மோடிக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம், மக்கள் குறைகளை தீர்ப்போம் என்கிற விதத்தில் இவர்களுடைய பிரச்சாரங்கள் எங்குமே அமையவில்லை. அது தான் இறுதியாக இந்த புகழாரத்தின் உச்சிக்கு மோடியை கொண்டு போய் நிறுத்தியது. இதன்விளைவு மோடி தன்னை மனித பிறவி இல்லை, கடவுளின் அவதாரம் என்று சொல்லுகிற அளவுக்கு கண்மூடித் தனமான முட்டாள்தனத்திலும் முட்டாள்தனமான ஒரு கருத்தை வெளிப்படுத்தினார். அது உலக மக்களையே அதிர்ச்சி அடைய வைத்தது. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய இயேசுவையும் முஸ்லிம் மதத்தை உருவாக்கிய நபிகள் நாயகத்தையும் அந்த மதத்தினர் கடவுள் என்று கூறவில்லை. அவர்களை இறைத் தூதர்கள் என்று தான் கூறினார்கள். ஆனால் மோடிஅவர்கள் மதவெறியின் உச்சத்திற்கு சென்று கண்மூடித்தனமாக தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டார். இத்தகைய அகம்பாவத்தையும், ஆணவத்தையும்தான் இந்த தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளும் இந்தியா கூட்டணியும் சேர்ந்து உடைத்துள்ளார்கள். மூன்றாவது முறையாக நான் பிரதமராக வந்தால் 1950 இல் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சட்டத்தையே மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் அந்த மோடிக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகப்பெரிய மரண அடியை கொடுத்ததினுடைய விளைவு தான் இந்த முறை அரசியல் சட்டப் புத்தகத்தை வணங்கி விட்டு ஜனாதிபதியை சந்திக்கச் செல்கிறார். வரலாற்றை பாஜக தன்னுடைய சுயநலத்திற்காக திருத்திஎழுத ஆரம்பித்தால், இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் பிரகடனப்படுத்தி உள்ளது.
- ஏ.லாசர், சிபிஎம் மூத்த தலைவர்