states

ஜி20 மாநாடு ஒதுக்கியது 990 கோடி செலவிட்டதோ 4,100 கோடி!

ஜி20 மாநாட்டை நடத்த ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட 300 சதவிகிதம் அதிகமாக செலவிட்டு ஊதாரித்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஜி20 மாநாட்டை நடத்த பட்ஜெட்டில் ரூ. 990 கோடி ஒதுக்கிய நிலையில், தற்போது ரூ. 4 ஆயிரத்து 100 கோடி  செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் கூடுதலாக ரூ. 3 ஆயிரத்து 110 கோடி அதிகமாக செலவிட்டுள்ளது. இந்த கூடுதல் நிதி ரூ. 3 ஆயிரத்து 110 கோடியும், மோடி  அரசின் விளம்பரம் உள்ளிட்ட தேவையில்லாத செலவுகளுக் காகவே அள்ளி இறைக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சி களின் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக ஜி20 மாநாட்டிற்காக, ரூ. 2 ஆயிரத்து 700 கோடி செலவிட்டு, தில்லி பிரகதி மைதானத்தில் ‘பாரத் மண்டபம்’ கட்டப்பட்டதாக பாஜக ஜம்பம் அடித்திருந்தது. ஆனால், அந்த ‘பாரத் மண்டபம்’, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்ததே, மழைத் தண்ணீரால் சூழப்பட்டது.  

மழைத் தண்ணீர் வெளியேறுவதற்குக் கூட வசதிகள் செய்யப்படாத லட்சணத்தில்தான் மோடி அரசு பாரத் மண்ட பத்தை கட்டியிருந்தது, பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது.  ஏற்கெனவே பல்வேறு துறைகளில், நிர்ணயிக்கப்பட்ட செலவைக் காட்டிலும்  கூடுதலாக செலவிட்ட வகைகளில், அரசுக்கு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். இதில், மிகப்பெரும் ஊழல் அரங்கேறியிருப்பதாக எதிர்க்கட்சிகள் இப்போதுவரை குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தப் பதிலும் கூறாத மோடி அரசு, மாறாக ஊழல்களை மறைக்கும் விதமாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தையும், சனாதனம் குறித்த பொய்ப்பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டது. இந்நிலையில்தான், ஜி20 மாநாடு பெயரிலும் மோடி அரசு ரூ. 3 ஆயிரத்து 110 கோடியை சூறையாடியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாஹேத் கோகலே, “இந்த தேவையில்லாத செலவு ரூ. 3 ஆயிரத்து 110 கோடியை, ஏன் பாஜக வழங்கக்கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.