states

img

‘உங்கள் பொய்களின் கோட்டை அழியும்!’ - ஸ்வேதா சஞ்சீவ் பட்

குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு மதவன்முறை நடந்தபோது, அங்கு ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சஞ்சீவ் பட். இவர், பின்னாளில் குஜராத் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, 2011 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.  சங்-பரிவாரத்தின் வன்முறை உச்சத்தில் இருந்தபோது, 2002 பிப்ரவரி 27 அன்று முதல்வர் நரேந்திர மோடி, அவரது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பகிரங்கமாக வாக்குமூலம் அளித்திருந்தார். எனினும் இந்த வழக்கில் நரேந்திர மோடியை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடியே பிரதமராக வந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு சஞ்சீவ் பட் காவல்துறை சேவையிலிருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணானி என்பவரின் காவல்நிலைய மரணத்திற்கு சஞ்சீவ் பட் காரணமாக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார். ஜூலை 2019-இல், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மேல்முறையீடுகளை செய்தார். தான் குற்றமற்றவர் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களை வழங்கினார். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் அதிகாரத்திற்கு முன்பு சஞ்சீவ் பட்டின் நீதிக்கான குரல் அமுங்கிப் போனது. நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்ததற்காகவே ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி இன்று சிறையில் (கடந்த 5 ஆண்டுகளாக) ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் தாக்கல் செய்த 3 மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தலா ரூ.1லட்சம் என ரூ.3லட்சம் அபராதமும் விதித்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா சஞ்சீவ் பட், தனது டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"கடந்த ஐந்து வருடங்களில் நீதித் துறை மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா என என்னி டம் அடிக்கடி கேட்கப்பட்டது. நான் சந்தித்த அலைக்கழிப்புகள் அதி ர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்தன. ஆனாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர், தைரியமாகவும் நேர்மையாகவும் நீதி யை நிலை நாட்டுவார்கள் என்ற நம்பிக்கை யின் வெளிச்சக்கீற்றை நான் விடாமல் பற்றி இருந்தேன். இருப்பினும் நான் ஏன் அப்படி நம்பி னேன் என இன்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன். ஏன் திரும்பத் திரும்ப வரு கிறீர்கள் என்று கூறி, ரூ.3லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்தியாவில் நீதிக்கான போராட்டத்தை நடத்துவது ஒரு கிரிமினல் குற்றம் என்று எனக்குத் தெரியாது. நீதியை  பெறுவதற்கு ஒரு நீதிமன்றத்தை இத்தனை முறைதான் அணுகலாம் என உச்சவரம்பு இருப்பதும் எனக்கு தெரியாது.

'நீதிக்கு எந்த வரையறையும் இல்லை.  இந்த நாட்டின் அரசியல் அமைப்பு அத்தனை குடி மக்களுக்கும் நீதி பெறுவதை உத்தர வாதத்துடன் கூடிய அடிப்படை உரிமை யாக்கியுள்ளது. எனவே நீதி கிடைக்கும்' என அப்பாவியாய் நினைத்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் தாக்கல் செய்த ஒவ்வொரு மனுவும் பதி வேட்டில் கூட இடம்பெறாமல் புழுதி படிந்து கொண்டிருந்தது. நாங்கள் நீதிமன்றத்தை நாடிச் சென்ற போதெல்லாம் நீதி திட்ட மிட்டு எங்களுக்கு மறுக்கப்பட்டது. நீதியைப் பெற விரும்பும் ஒரு தனி மனிதருக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பான புகலிடமாக இருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றமே அதனை அணுகியவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையில் அதிகா ரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பொழுது ஒருவர் நீதியை பெற எங்கே செல்வது? நீதிமன்றத்தை அணுகுபவர்களை கண்டிப்பதும், மிரட்டுவதும், தண்டிப்பதும் அவர்களின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக இன்று நாம்  நீதியை தேடுவது குற்றமாக்கப்படும், கண்டிக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் காலங்களில் வாழ்கிறோம் சமூகத்தில் நேர்மை துடைத்தெறியப்படும். நாச வேலைகள் நாளை ஆட்சி செய்யும். பலாத்காரம், கலவரம், கொலை ஆகியவை கேளிக்கை அம்சங்களாக மாறி  அதில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக உலா  வரக் கூடிய காலங்களில் நாம் வாழ்கிறோம். அதே நேரத்தில் நேர்மையும், துணிவும் உடையவர்கள் நீதிமன்றத்திடம் நீதியைப் பெறும் நாளுக்காக வேண்டி சிறையில் வாடுகிறார்கள். அமைப்புகளை சீர்குலைக்க இந்த  ஆட்சி தங்கள் மூர்க்கமான சக்தியை தொட ர்ந்து பயன்படுத்துகிறது. சஞ்சீவைப் பயமுறுத்திட, அவர் குரலை அடக்கிட, அவரை நிர்மூலப்படுத்திட நீதித்துறை பயன்படுத்தப்பட்டு ஒரு  கேலிக்கூத்தாக மாறி உள்ளது.  இந்த ஆட்சிக்கும் இவர்களின் கைக் கூலிக்கும் நாங்கள் கூறுவது ஒன்று தான். உங்கள் நேர்மையற்ற விளையாட்டுக ளை நீங்கள் தொடரலாம். எல்லா முரண்பாடு களையும் தகர்த்து நாங்களும் தொடர்ந்து போராடுவோம். எங்களிடம் நேர்மையும் உண்மையும் உள்ளது. உங்களிடம் எல்லா சக்தியும் உள்ளது. எனவே எங்களை அடித்து உதைத்து மிரட்டி துன்புறுத்தி வெறுப்பின் மூலம் அடி பணியச் செய்யலாம் என நீங்கள் கட்டிய பொய்களின் கோட்டை அழியும் வரை நாங்கள் போராடுவோம். நாங்கள் நேர்வழியில், கலங்காமல், சம ரசத்திற்கு இடம் தராமல், எதற்கும் வளைந்து கொடுக்காமல் நீதியை நிலைநாட்டி வருகிறோம்."

- தமிழில் : கடலூர் சுகுமாரன்