states

என்எல்சி வேலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை: முதல்வர் கடிதம்

சென்னை,மே 5- நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவன வேலையில்  தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்தார். நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக  பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன் அறிவிப்பின்றி கேட் மதிப்பெண் களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித்தும் அதனால் இந்த தேர்வு முறைமையை ரத்து செய்ய  வேண்டுமென கோரி என்.எல்.சி தலைவர் ராகேஷ் சர்மாவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு. வெங்கடேசன் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், முன் அறிவிப்பின்றி தேர்வு தகுதியை மாற்றியது அநீதி, சம வாய்ப்பை மறுப்பது எனச் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்தநிலையில், தற்போது 300 பேர் கொண்ட நியமன பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அப்பட்டியலில் உள்ள  பெயர்களைப் பார்க்கும் போது தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒரே ஒருவர்தான். ஆகவே இந்த தேர்வு முறையை நிறுத்தி விட்டு உரிய அவகாசத்துடன் தேர்வுத் தகுதிகளை அறிவித்து புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்த பிரச்சனை தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொ லித்தது. புதனன்று(மே 5) கேள்வி நேரம் முடிந்ததும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் அரசின்  கவனத்திற்கு கொண்டுவந்தன.  என்எல்சி மட்டுமின்றி கூடங்குளம் அனல் நிலையத்திலும் நிலை நீடிக்கிறது. ரயில்வே,அஞ்சல் துறை என பல்வேறு துறைகளிலும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடுக்க  ஒன்றிய அரசு மறுக்கிறது என்றார் பேரவைத் தலைவர் மு. அப்பாவு. இதற்கு பதில் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்,“ நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து முதலமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்த கடலூர் மாவட்ட  மக்களுக்கு உரிய நிவாரணமும், வேலையும் கொடுக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது என்று என்எல்சி நிறுவ னத்திற்கு அறிவுறுத்திய முதலமைச்சர், என்எல்சி வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்  என்று கடிதம் எழுதியிருக்கிறார் என்று கூறினார்.