states

தமிழகத்தை குளிர்வித்த கோடை மழை !

சென்னை, மே 10- வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘அசானி’ புயல் நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்துள் ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் 5  மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு என சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள் ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்த  நிலையில், இரவு பத்து மணிக்கு மேல்  சூறாவளியுடன் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் பல் வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், தாண்டவராயபுரம், சொக்கநாதபுரம், கல்லாநத்தம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. விழுப்புரம் சுற்றுவட்டாரத்திலும் பரவலாக மழை பெய்தது.

திருச்சி மாநகரில் கண்டோன் மெண்ட், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணியளவில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பரவ லாக சாரல் மழை பெய்தது. அதேபோல் சென்னையில் திங்கட்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 11 மணிக்கும் காலை 9மணியளவிலும் சென்னையின்  முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலின் தாக்கத்தால், சற்று கோடை வெப்பம் குறைந்திருக்கிறது. கோடை மழை, மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.