சென்னை, ஜூன் 20- கள்ளச்சாராயக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (ஜூன் 21) அனைத்து மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 38 பேர் இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது மக்களை அச்சத்திலும், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி நடக்கும் கள்ளச்சாராயம் விற்பனை தமிழ்நாட்டில் சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பை உருவாக்கவும் காரணமாக அமையும். ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயக் கும்பலை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உயர் சிகிச்சையும் வழங்க வேண்டும். கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்துள்ள அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வை தன்னார்வக் குழுக்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்களை அமைத்து போர்க்கால அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் ஜூன் 21 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் “கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வெளிவரும் தகவல்களில் காவல்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும் மரணங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் முற்றிலும் கள்ளச்சாராயத்தை ஒழித்திடும் நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் கொடுத்திட மாவட்ட மாநில அளவில் சிறப்பு அதிகாரிகளை நியமித்திட வேண்டும். கிராம பஞ்சாயத்து அளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்களை உடனடியாக அரசு ஏற்படுத்திட வேண்டும். தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசு சார்பில் செய்திட வேண்டும். ஒரு தலைமுறையையே சீரழிக்கும் இத்தகைய போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். தமிழகம் முழுவதும் போதை குறித்தான ஆய்வுகளை நடத்தி அதற்கு ஏற்ற வகையில் போதையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர். ஜூன் 21 (இன்று) மாதர் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மெத்தனமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.