புதுதில்லி, ஜூலை 3 - நீதிமன்றம் சொல்வதற்கு முன்பே பத்திரிகையாளர் முகமது ஜூபைருக்கு 14 நாள் நீதிமன்ற காவலை தில்லி காவல்துறை அறிவிக்கிறது; ஆனால் உச்சநீதிமன்றமே சொன்னபிறகும் நூபுர் சர்மா மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தமது டுவிட்டர் பதிவுகள் மூலம் கூறியிருப்பதாவது: முகமது நபிகளை இழிவுபடுத்தி பேசிய நூபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் கூறும்போது, சம்பந்தப்பட்டவர் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கலாம்; ஆனால் அவர் இந்த நாட்டின் சட்டத்திற்கு எந்தவிதமான மரியாதையும் அளிக்காமல் எத்தகைய பேச்சை வேண்டுமானாலும் பேசுவதற்கு அதிகாரம் படைத்தவரா என்று கேள்வி எழுப்பியிருந்தது நூபுர் சர்மாவின் கருத்துக்கள், அவர் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரமிக்கப் பொறுப்பில் இருந்தவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே வெளிப்பட்டவை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. நூபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
நீதிமன்றத்தின் கூற்று, தொடர்ச்சியாக இந்த நாட்டில் பாஜக எனும் கட்சியாலும் அதன் தலைவர்களாலும் அதன் கூலிப்படையினராலும் இடைவிடாமல் பரப்பப்பட்டு வரும் பிரிவினை அரசியலுக்கு எதிரான கண்டன விமர்சனமே ஆகும். பாஜகவினரின் செயல்கள் இந்த நாட்டை கடுமையான ஆபத்தில் தள்ளியுள்ளன. இதற்காக பாரதி ஜனதா கட்சியே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்து வருவது முற்றிலும் தேசவிரோத, பிரிவினைவாத, இந்திய விரோத செயல்களே ஆகும். உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி, சமீபநாட்களாக இந்திய நாட்டில் ஏற்பட்டுள்ள கொடூரமான, தொடர்ச்சியான வன்முறை தொடர் விளைவுகளுக்கு நூபுர் சர்மா தான் பொறுப்பு ஆவார். உச்சநீதிமன்றத்தின் இந்த வார்த்தைகளை செயல்படுத்தும்விதமாக அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏற்பட்ட கடுமையான நிர்ப்பந்தத்தின் காரணமாக நூபுர் சர்மா பாஜக தற்போதைக்கு இடைநீக்கம் மட்டுமே செய்துள்ளது. ஆனால் நூபுர் சர்மா மீதும் அவரைப் போன்றே அவரது கட்சியால் வளர்த்துவிடப்படுபவர்கள் மீதும் சட்டம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய தீமையை ஏற்படுத்தும். பிரிவினையைத் தூண்டும், வன்முறையை விதைக்கும், இந்த நாட்டிற்கே ஒரு தவறான பாதையை காட்டிவிடும்.
ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வெறுப்பு தொழிற்சாலையிலிருந்து இவரைப் போன்ற நூற்றுக்கணக்கானோர் கொடிய காளான்களாக முளைத்து வருகிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் வன்முறையை விதைக்கிறார்கள். இந்த பின்னணியில், மிக மிக போலித்தனமான, அற்பமான காரணங்களை முன்வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் முகமது ஜூபைரை விடுதலை செய்வதற்கு உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம். இந்த விசயத்தில் தில்லி காவல்துறை மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. தில்லி நீதிமன்றம், ஜூபைருக்கு நீதிமன்றக் காவல் என்று அறிவிப்பதற்கு அரை நாள் முன்பே 14 நாள் நீதிமன்றக் காவல் என்று தில்லி காவல்துறை தானாகவே அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்தியாவின் நீதித்துறை சுயேச்சையான ஒன்று என்பதற்கு எதிராக தில்லி நீதிமன்றத்தின் செயல்பாடு ஒரு தாக்குதலாக அமைந்துள்ளது. மற்றொருபுறம் கொடிய பேச்சின் மூலமாக வெறுப்பை விதைத்த நூபுர் சர்மா, திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுவிட்டார் என்று பாஜக ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிற தில்லி காவல்துறை வக்காலத்து வாங்குகிறது. உண்மையில் முகமது ஜூபைர் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர், தனது பத்திரிகை தொழிலின் மூலமாக சுயேச்சையாக உண்மைகளைக் கொண்டுவர அனுமதிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்த நூபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.