பெங்களூரு அணியுடனான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இளம்வீரர் ரியான் பராக் இக்கட்டான சூழலில் களமிறங்கி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் பொழுது பெங்களூரு பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கும், ரியானுக்கும் மோதல் ஏற்பட்டது. ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக வந்த முகமது சிராஜிடமும் மோதலுக்கு தயாரானார் ரியான். நடுவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். ஆட்டம் நிறைவு பெற்ற பின் ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டியபோது, அவர் ரியானை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் ரியான் பராக் (20 வயது) இளம் வீரர் என்ற கண்ணோட்டத்துடன் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார்.அதில்,”கடந்த ஐபிஎல் சீசனில் நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தேன். அப்போது டிரெஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கைகாட்டி இருக்கிறார். நான் கவனிக்கவில்லை. விடுதிக்கு வந்து மறு ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பார்க்கும் போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது. மீண்டும் நடப்பு சீசனில் ரன்கள் குவித்துவிட்டு அவர் செய்ததை நான் மீண்டும் செய்தேன். இது தான் மோதலுக்கு காரணம். அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து “நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்” என்று கூறினார். நான் அவரிடம் நான் உங்களிடம் எதுவும் சொல்லவில்லை என தெரிவித்தேன்” என ரியான் பராக் தெரிவித்தார்.