வரலாறு காணாத அதி கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழைவெள்ளத்தால் சாலைகள் அரித்துச்செல்லப்பட்டு பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த இயற்கைச் சீற்றத்தால் மக்கள் சொல்லொண்ணா துயரங்களைச் சந்தித்தனர். தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைத்தது இந்த அதிகனமழை. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
பல உப்பளங்கள் பாதிப்படைந்தன. உப்பளத்தொழிலாளிகள் நிலைமை மிக மோசமாக உள்ளது. இப்படி பல வகைகளில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடைகளின் மாடிகளில் மக்கள் தங்கினார்கள். தோப்பு தெருவில் உள்ள பள்ளிவாசலை மக்களுக்காக திறந்து விட்டு பயன்படுத்திக் கொள்ள அந்த நிர்வாகம் அனுமதித்தது. அங்கு உணவும் சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். சர்ச்சுகளிலும் உணவு சமைத்துக் கொடுக்கப்பட்டது. முத்தையாபுரம் பகுதியில் சிபிஎம், சிஐடியு அமைப்பினர் படகில் சென்று இறந்தவர்களின் உடலை மீட்டனர்.தண்ணீரில் தத்தளித்த 60-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டனர்.
உழைப்பாளி மக்களின் மனிதாபிமானம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சில பகுதிகளில் உணவு, குடிநீர், பால் பவுடர், பிஸ்கட் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. பழைய காயல் அடுத்த மஞ்ச நீர் காயல் கிராமத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில், ஆடைகள் கொண்டு சென்றோம்.அங்குள்ள மக்கள் அனைவரும் உப்பள தொழிலாளர்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடும்பத்தோடு பழைய காயலில் உள்ள முகாமில் ஒரு வாரம் தங்கினர். ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
அப்போது அப்பகுதி மக்கள், “அகரம் கிராமத்திற்கு கொண்டு போங்கள். அந்த மக்களுக்கு எந்த நிவாரணம் கிடைக்கவில்லை” என்று கூறினர். உழைப்பாளி மக்களின் மனிதாபிமானம் இங்கு வெளிப்பட்டது. கடல் பகுதியான கோவளத்தில் வெள்ளம் சூழ்ந்து, தனித்தீவாக மாறி புதிய ஆறு உருவானது போல இருந்தது. அங்கிருந்த 50 குடும்பங்களை மீட்டோம். இல்லையெனில் அவர்கள் கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு இருப்பார்கள்.
மழை வெள்ளம் கற்றுக்கொடுத்த பாடம்
தாமிரபரணி ஆறு மற்றும் அணைக்கட்டுகள், குளங்கள், கால்வாய்களின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தும் மணல் மாபியாக்கள் ஆற்றின் உட்புறம் மணல்களை கொள்ளையடித்தும் வருகின்றன. கனமழை வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு மணல் மாபியாக்களின் செயலும் ஒரு காரணம்.
ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதும் குளங்களை தூர்வாரி, அணைகளை சீரமைப்பதும் முக்கிய பணியாக அரசு நிர்வாகத்தின் முன் உள்ளது. இது மழை, வெள்ளம் கற்றுக்கொடுத்த பாடம்.
நிவாரணம்-மருத்துவ முகாம்
டிசம்பர் 17 ஆம் தேதியிலிருந்து இன்று வரை ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பல்வேறு நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முள்ளக்காடு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி செய்யப்பட்டது. இயற்கை உபாதைகளை எல்லாம் அள்ளிக்கொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்தனர். மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மன தைரியத்துடன் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதான் எங்களுக்கு அமைப்பு கற்றுக் கொடுத்த பாடம். மக்களுக்காக வாழும் போது, சேவை செய்யும்போது வாழ்க்கை மகத்தானதாக மாறுகிறது.
இந்த பணிகளில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். சசிகலா, மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாநிலக்குழு உறுப்பினர் இனிதா, மாவட்ட பொருளாளர் சித்ரா, நிர்வாகிகள் கமலம், விஜயலெட்சுமி, ராமலெட்சுமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.