states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு 
வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, நவ.18-  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து, 19 ஆம் தேதி ஒருசில இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இதன் காரணமாக 23 ஆம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில்  முன்பதிவு காலம் 90 நாட்களாக அதிகரிப்பு

சென்னை, நவ.18- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக, தற்போது முன்பதிவு நடைமுறையில் மாற்றம் என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பத னை 90 நாட்கள் என உயர்த்தி 18 நவம்பர், மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள் ளது. பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி, நவ.18- குமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை அணை, சிற்றாறு 1 அணைகளில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரால் கோதையாறு பெருக்கெடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து 8 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழை சற்று குறையத் தொடங்கியதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து வெள்ளப்பெருக்கு சீரானதால் 8 நாட்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டையில் அதிகரிக்கும் காய்ச்சல்  3 நாட்களில் 139 பேர் சிகிச்சை; 3 பேருக்கு டெங்கு

புதுக்கோட்டை, நவ.18- புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவ மனைகளில் நோய் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்து வருகின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 139 நபர்கள் காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 44 நபர்களுக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 நபர்கள் சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் 44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் 1,237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 34,142 பேருக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைப்பு

தருமபுரி, நவ.18 - மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 5,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக ஞாயிறன்று குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பை விட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று 106.19 அடியில் இருந்து 106.51 அடியாகவும், நீர் இருப்பு 73.09 டிஎம்சியில் இருந்து 73.53 டிஎம்சியாகவும் உயர்ந்தது.  தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சனிக்கிழமை, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், ஞாயிறன்று, நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.