states

img

நான் அறிந்த தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் - uy வே.மீனாட்சி சுந்தரம்

நான் 1961 முதல் 1968 வரை மவுண்ட்ரோடு சிம்சன் பிளாண்ட்-1இல் தொழில்நுட்ப உதவியாளனாக பணிபுரிந்தேன். தினசரி எல்லிஸ் சாலை சந்திலிருந்த வீட்டிற்கு நடந்தே செல்வேன். அன்று மவுண்ட்ரோடிலிருந்த (இன்று அண்ணா சாலை) மைகாபிபார் ஹோட்டலில் காபி குடிக்காமல் வீடு போகமாட்டேன். ஒரு முறை மைகாபிபார் ஹோட்டல் மூடலை எதிர்த்து ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் தினசரி ஹோட்டல் வாசலில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.  அந்த வகையில் ஒருநாள் ஒருவர் பேசியதைக் கேட்டேன். அவர் பேசிய விதம் கூட்டத்தை திரட்டியது. என்னையும் நகரவிடவில்லை. “உலகில் எத்தனையோ தொழில்கள் வரும், பின்னால் காணாமல் போகும். மானுடம் உள்ளவரை உணவு படைப்பது ஒன்றுதான் அழியாத தொழில்” என்று கூறினார். “இது தொழில் மட்டுமல்ல, கலையும் ஆகும். ஆனால் இதைத்தான் கேவலமான தொழிலாக நாகரிக மனிதன் கருதுகிறான்” என்று கூறி, ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, “தோழர்களே, இங்கே தொழிலாளர் நல இலாகா இருக்கிறது. சட்டங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்தப் பக்கம் தலைகாட்டவில்லை. ஆனால் இங்கு இரவு பகலாக ஒரு போலீஸ் பட்டாளம் நிறுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர் பிரச்சனை என்றால், அரசு ஏன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கிறது? இது முதலாளிகளை பேணுகிற அரசு. தொழிலாளர்கள் மனதில், முதலாளி இல்லாமல் வாழ இயலாது என்ற எண்ணத்தை பதிய வைக்கவே அரசு மிரட்டுகிறது” என்று அவர் பேசியது எனக்குப் புதுமையாக இருந்தது.  அன்று வரை நான் அரசும் அதிகாரிகளும் நடுநிலை வகிப்பதாகவே கருதும் பாமரனில் ஒருவனாக இருந்தேன். அப்போது பேசியது யார் என்று நான் அறியேன். பின்னர் தான் அங்கு பேசியது தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் என்று தெரிந்து கொண்டேன். 

ஸ்டிரிங்கர் தெரு ஹோட்டல் தொழிலாளர் சங்கம் 

சிம்சனிலிருந்து பணி நீக்கம் செய்த பிறகு, ஸ்டிரிங்கர் தெரு ஹோட்டல் தொழிலாளர் சங்கம் எனது பல்கலைக்கழகமானது. தோழர் பரமேஸ்வரன் எனது ஆசான்களில் ஒருவரானார்.  கேரளத்தில் பிறந்த பரமேஸ்வரன், 11 வயது சிறுவனாக சென்னை வந்தார். இந்த குழந்தை தொழிலாளிதான் சிறந்த சிந்தனையாளனாக உயர்ந்தார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து எழுதிய புத்தகங்களில் முக்கியமானது ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற புதினம். அவர் சுயமாகவே ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இவரது தமிழ் உச்சரிப்பு தாய்மொழி போல் இருக்கும்.  பள்ளிக் கல்வி அறிவு பெற வாய்ப்பிழந்த பரமேஸ்வரன், ஒரு பல்கலைக்கழகத்தில் பெற முடிந்ததை விட அதிகமாக அரசியல், பொருளாதாரம், வரலாறு, பூகோளம் பற்றி அறிந்திருந்தார் என்பதை, சங்கத்துக்கு வருகிறவர்களோடு அவர் அளவளாவும் போது பளிச்சிடும்.

சென்னை தொழிற்சங்க இயக்கத்தில் பங்கு

சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தில் 1967க்குப் பிறகு வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம்.ஹரிபட் ஆகிய மூவரின் பங்களிப்புகள் இல்லாத தொழிற்சங்க நிகழ்வுகளை எழுத இயலாது. மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி வர்க்க கட்சி என்ற முறையில் முத்திரை பதிப்பதற்கு பரமேஸ்வரனின் பங்கு மிக முக்கியமானது.  தடுப்புக்காவல் மற்றும் கட்சிப் பணி பீடித் தொழிலாளர்களை திரட்டுகிற வேலை தவிர, மற்ற நேரம் கட்சிப் பணிதான் செய்துவந்தார். ஆனாலும், எம்.ஆர்.எஃப் டயர் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்பவர் என்று இவரை அரசு தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தது. ஏன் எனில், போராடும் தொழிலாளர்களிடம் அரசியல் போதகராக, கிளர்ச்சிப் பிரச்சாரகராக இருந்தார். உழைப்பாளிகள், சுயவேலை செய்பவர்கள் யார் போராடினாலும், அதில் நியாயமிருக்குமானால், அங்கு வலிய சென்று ஆதரித்து பேசும் பழக்கமுடையவர் சிந்தன், பரமேஸ்வரன், ஹரிபட் ஆகியோர். இந்த மூவரின் பங்களிப்பே சென்னையில் மார்க்சிஸ்ட் இயக்கம்.

கட்சியின் வளர்ச்சியில் பங்கு

1964 இல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது, சிம்சன் தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்கொடை கொடுத்தால் ரசீது வேண்டாம். ரசீது இருந்தால் போலீஸ் தொந்திரவு செய்யும் என்பார்கள். உளவுத்துறை மார்க்சிஸ்ட் கட்சியோடு தொடர்புள்ளவர்களை கண்காணித்தது. குறிப்பாக ஸ்டிரிங்கர் தெருவில் சங்கத்திற்கு வருவோர் போவோரை கண்காணித்தது. சங்க இயக்கத்தால் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை நெருக்கமாக அறிந்தவர்கள் தவிர, மற்றவர்கள், கட்சிப் பெயரை சொன்னாலே ஒதுங்குவார்கள். பயங்கர வாதிகளாகவும், நாட்டுப்பற்று, இனப்பற்று போன்ற ‘புனிதமான’ பற்றுக்கள் அற்றவர்களாகவும் பத்திரிகைகளும் ஊடகங்களும் சித்தரித்தன. இச்சூழலில் கட்சிப் பணி செய்வது எவ்வளவு கடினமானது என்பது சொல்லாமலேயே விளங்கும். 

தலைமறைவு மற்றும் கட்சிப் பணி

அவசரநிலை காலத்தில் தலைமறைவாக இருந்த, கட்சியின் அகில இந்திய தலைவர்களின் கூட்டத்தை நடத்தி சாதனை படைத்தார். இதற்கு மாணவர் இயக்கத்தை சார்ந்தவர்களையும், தொழிற்சங்கத்தில் இயங்கும் இளம் கட்சி ஊழியர்களையும் இயங்க வைத்தார் என்றால், அவரது கட்சி உறுப்பினர்களோடு அவருக்கிருந்த நெருக்கம் சரியான தோழர்களை தேர்வு செய்ய உதவியது. 

கட்சியில் உயர்ந்த பொறுப்புகள்

தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு, மாநில செயற்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் செயல்பட்டவர். கட்சிக்கல்வி வகுப்புகள் நடத்தும் ஆசிரியராக மிளிர்ந்தவர். கப்பற்படை எழுச்சி, இட ஒதுக்கீடு பற்றிய சிறு நூல்கள் எழுதியவர். ‘நினைவுகள் அழிவதில்லை’, ‘கல்லில் தீப்பொறிகள்’ போன்ற நாவல்களை மலையாளத்திலிருந்து தமிழாக்கித் தந்தவர். இதற்கெல்லாம் சிகரமாக, கட்சியின் தத்துவ மாத ஏடான ‘மார்க்சிஸ்ட்’ இதழின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  பி.ஆர்.பரமேஸ்வரன் என்பவர் ஒரு சாதாரண தொழிலாளியிலிருந்து உயர்ந்த மார்க்சிஸ்ட் அறிவாளியாக, தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கினார். அவரது வாழ்க்கையும் பணிகளும் இன்றைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளன.