சென்னை, மே 1- உழைப்பாளி மக்களிடம் அதிகாரம் கிடைக்கும் போது சுரண்டலற்ற சமூகத்தை அமைக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். 136ஆவது மேதினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றிவைத்து அவர், பேசியதாவது: இந்தியாவிலே முதன் முதலில் மே தினத்தை கொண்டாடிய பெருமை தமிழகத்தை குறிப்பாக சென்னை மாநகரைச் சேரும். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி சென்னையில் உள்ள தொழிலாளர்களை திரட்டி மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தி மெரினா கடற்கரையில் செங்கொடியை ஏற்றினார். உரிமைகளை போராடிப் பெற்ற தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் அமரும் மகத்தான வெற்றிகளையும் பெற்றுள்ளது. சில நாடுகளில் சோசலிச முகாம்களுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் உலகத்தில் இன்றைக்கும் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாத்த சமூக அமைப்பு சோசலிசம்தான். இதை யாராலும் மறுக்கமுடியாது. மக்கள் சீனம், வட கொரியா, கியூபா போன்ற நாடுகள் இதை இன்றைக்கும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. எனவே உழைப்பாளி மக்களிடம் அதிகாரம் கிடைக்கும் போது சுரண்டலற்ற ஒரு சமூகத்தை அமைக்க முடியும், ஒட்டுமொத்த சமூகத்தின் உற்பத்தி சக்திகள் அனைத்தும் மக்களின் கைக்கு கிடைக்கும்.
சோசலிச மாடலுக்கு மாற்றான மாடல் உலகத்திலே இதுவரை வந்ததில்லை. உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, லட்சணக்கனக்கானோர் இறந்த நிலையில், சோசலிச நாடுகள்தான் கொரோனாவை கட்டுப்படுத்தி, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தன. பணமாக்கல் திட்டம் யாருக்காக? ஒட்டுமொத்த இந்தியாவையே கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் தாரைவார்க்கும் மோசமான நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை, அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். கனிம வளங்களை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பணமாக்கல் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டுவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். பல ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை ஒன்றிய மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் விரோதமான ஆட்சி. விரல் விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் முதலாளிகளை பாதுகாக்கும் ஆட்சியாகத்தான் மோடி அரசு செயல்படுகிறது.
உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மத, சாதிய மோதல்களையும், வெறியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும், பொருளாதார நெருக்கடி அந்த மக்களை ஒன்றிணைக்கும் என்பதுதான் வரலாறு. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சாதி, மதம், மொழி கடந்து அனைத்து மக்களும் ஒன்று திரண்டு அந்த அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகச்சிறந்த உதாரணம். மத ஒற்றுமையை சீர்குலைக்கும் மோடி ஆட்சிக்கு, இந்துத்துவா கொள்கைக்கு முடிவுகட்டி, உழைப்பாளி மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு மே தினத்தில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் வே.ராஜசேகரன், வில்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.