states

நில அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப்.1-  மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத ஒன்றிய அரசின் முதன்மைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கட்டுமானப் பணிகள் குறித்து நில அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த  உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 2019-ல் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையின் போது, ஒன்றிய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, ஒன்றிய அரசின் முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது’’ என தெரிவித்தார். இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.