60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை கொடுத்து அதை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் சீனம் மும்முரமாக உள்ளது. மீண்டும், மீண்டும் தொற்று பரவி வருவதால் அரசின் அனைத்து மட்டங்களும் இந்தப் பணியைச் செய்யும் வகையில் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இவர்களுக்குதான் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன மக்களில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் கடத்திச் செல்கிறது என்று உக்ரைன் குற்றம் சாட்டி வந்தது. அது குறித்து விசாரித்த யுனிசெப் அமைப்பு, அந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. பிரச்சனை முற்றியதில் இருந்து 5 லட்சம் மக்கள் தாங்களாகவே உக்ரைனின் கிழக்குப் பகுதி மாகாணமான டோன்பாசிலிருந்து ரஷ்யாவுக்குள் வந்திருக்கிறார்கள் என்று ரஷ்யா தெளிவுபடுத்தியிருந்தது. அதைத் தற்போது யுனிசெப் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நிழலில் எனது நாடு நீடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக உள்ள மரின் லீ பென் தெரிவித்துள்ளார். அதி தீவிர வலதுசாரி வேட்பாளரான இவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் மீதான மக்கள் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். தான் ஜனாதிபதியானால் நேட்டோவில் இருந்து பிரான்சை விலக்கிக் கொள்வேன் என்று அவர் அறிவித்துள்ளார்.