‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள், பிற கட்சிகளால் சிக்கல் வரலாம் என்று அஞ்சி, அதைப் பற்றிய விபரங்களை வெளியிடத் தயங்குகிறார்கள். அதனால், அவர்களுக்கு உதவுவதற்காகவே தேர்தல் பத்திரம் என்ற மறைமுக நன்கொடை அளிக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறோம்’ என்று அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். இந்த வாதத்தைத்தான் அண்மையில் உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றிய அரசு வைத்து, நீதிமன்றம் ஏற்க மறுத்து, இதுவரையான தேர்தல் பத்திரங்களின் விபரங்களைக் கேட்டிருக்கிறது. நன்கொடை விபரங்களை வெளிப்படுத்துவது நன்கொடை அளிப்பவர்களின் நலனுக்கு உகந்தது அல்ல என்று வாதிட்ட ஒன்றிய அரசு, இப்போது, தேர்தல் பத்திரங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து வகை நன்கொடைகளைப் பற்றிய விபரங்களையும் அளிக்க வேண்டும் என்கிறது. வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்கும்போது, இதுவரை அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைத் தொகை மொத்தமாகக் குறிப்பிட வேண்டியிருந்த நிலையில், இனி அவற்றைப் பற்றிய விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்திருக்கிறது. ரொக்கமாக, காசோலையாக, பிற வழிகளில் வழங்கப்பட்ட நன்கொடைகள், அவற்றின் காசோலை அல்லது பரிவர்த்தனை எண் போன்ற விபரங்கள் ஆகிய அனைத்தையும் இனி அளிக்க வேண்டும். வருமான வரித்துறையின் அதிகார வரம்புக்குள்தான் வங்கிகளும் வருகின்றன என்பதால், இந்தப் பரிவர்த்தனை விபரங்களைக் கொண்டு, அந்த நன்கொடை யாருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அத்துறையால் கண்டுபிடித்துவிட முடியும். அது மட்டுமின்றி, இந்த நேரடி வரிகள் வாரியம் இருக்கிற அதே நிதித்துறையின்கீழ்தான் அமலாக்கத்துறை, நிதி புலனாய்வுத்துறை ஆகியவையும் உள்ளன. எனவே, இங்கு திரட்டப்படுகிற தகவல்கள் அந்தத் துறைகளால் வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவும் முடியும். ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறிவைத்து நடவடிக்கைகளை எடுப்பதான குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே அமலாக்கத்துறை உள்ளாகி வருகிற பின்னணியோடு இணைத்துப் பார்த்தால், இது எதிர்க்கட்சிகளையும், அவற்றுக்கு நிதியளிப்பவர்களையும் ஒருசேர ஒடுக்குகிற நடவடிக்கைக்கான தொடக்கம் என்று புரியும். அதனால்தான், நன்கொடை அளிப்பவர்களைப் பாதுகாக்க என்று பேசிய பாஜக ஆட்சி, இன்று தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதம் என்று தீர்ப்பு வந்தவுடன், வைத்தால் குடுமி, எடுத்தால் மொட்டை கதையாக எல்லா நன்கொடை விபரங்களையும் அளிக்க வேண்டும் என்று மாற்றிப் பேசுகிறது. தேர்தல் பத்திரங்களின்மூலம் ஏராளமான நிதியைத் திரட்டிய பாஜக, அந்த வழி அடைபடுவதால், மற்ற கட்சிகளுக்கு நிதியளிப்பவர்களையும் மிரட்டி, தங்களுக்கான நிதியை அதிகரிப்பதற்கான வழியாகவே இந்த உத்தரவை வெளியிட்டிருக்கிறது எனலாம்.