states

பின்னுக்குத் தள்ளப்படும் ஜனநாயகம்

தெற்காசிய நாடுகளில் ஊடகங்கள் மீதான  தாக்குதலுக்கு எதிராக கூட்டாகச் செயல்படுவோம்   புகழ்பெற்ற கல்வியாளர்கள், இதழாளர்கள், செயற்பாட்டாளர்கள் அறைகூவல்

தெற்காசிய நாடுகளில் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துவருவது, ஜனநாயகம் பின்னுக்கு தள்ளப்படுவதன் அடையாளம் என்றும், இதற்கெதிராகக் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்றும் தெற்காசியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். அறிக்கையில் மூத்த அறிவியலாளரும், கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெயதேவ உயன்கோடா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ராதிகா குமாரசாமி, கனக் தீட்சித், காத்மண்ட் ஹிமல் சௌத் ஏசியின் இதழ் ஆசிரியர் ரோமன் கௌதம், கொழும்பு ஊடக ஆய்வாளர் நாலகா குணவர்தனா, கொழும்பு, சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாக இயக்குநர்  சகுந்தா கதிர்காமர், கொழும்பு மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின்  நிர்வாக இயக்குநர்  டைரக்டர் பி.சரவணமுத்து முதலானவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்:

தெற்காசியாவில் பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என்பவை குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டும் நடந்திடவில்லை. மாறாக தெற்காசியா முழுவதும் ஜனநாயக உரிமைகள் மிகவும் மோசமான வகையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தியாவில் நியூஸ்கிளிக் ஊடகத்துடன் தொடர்புடைய 46 இதழாளர்களின் வீடுகளில் தில்லி காவல்துறையினர் நடத்திய சோதனைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவைகளாகும். “சீனாவுடன் தொடர்புடைய பயங்கரவாத வழக்கில்” விசாரிக்கிறோம்  என்று சாக்குப்போக்கு சொல்லி அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் அடாவடித்தனமானது.

குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக  ஊடகங்களுக்கு மிரட்டல்  

இந்தியாவில் சுதந்திரமான ஊடகத்தின் மீது கேவலமான முறையில் அரசாங்கத்தால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக எவ்விதத் தயவுதாட்சண்யமுமின்றி கண்டனத்தைத் தெரிவித்துள்ள முற்போக்கு ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன்  நாங்களும் இணைந்து கொள்கிறோம்.  காவல்துறையினரையும் அரசு இயந்திரங்களை யும் துஷ்பிரயோகம் செய்து, தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக சுதந்திர ஊடகத்தின் மீது துன்புறுத்தல்களை யும் மிரட்டல்களையும் மேற்கொள்வது ‘ஜனநாயகத்தின் தாய்’  என்று கூறப்படும் ஒரு நாட்டில் இப்போது அதிகரித்துக்கொண்டிரு க்கும் போக்கின் ஓர் அங்கமாக இருக்கிறது. 1970-களில் இருந்ததைப் போல அவசர நிலை அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்பட வில்லை என்ற போதிலும் இப்போது இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் இருந்த போக்குகளைப் போன்றே இருக்கின்றன என்று பலர் விமர்சிக்கிறார்கள்.

இலங்கையிலும் வங்கதேசத்திலும்!

வங்கதேசத்தில் ஒதிகார் என்னுமிடத்தில் அதிலுர் ரஹ்மான் மற்றும் நசிருதின் இலான் ஆகிய இதழாளர்கள் குறிவைத்து துன்புறுத்தப்பட்டிருப்பதையும், இலங்கையிலும் ‘ஆன்லைன் பாதுகாப்பு சட்டமுன்வடிவு’ மூலம் பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.  இவ்வாறு வங்கதேசம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள், தெற்காசியாவில் வாழும் நம் அனைவருக்கும் அபாயகரமான ஒரு எச்சரிக்கை மணி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறான செயல்களை அம்பலப்படுத்தத் துணியும் எவராக இருந்தாலும் அவர்களை ‘சமூக விரோதிகள்’ எனவும், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எனவும் முத்திரை குத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.  இவை, ஆட்சியாளர்கள் எந்த அள விற்கு எதேச்சதிகார சீரழிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. உண்மையில் இது தெற்காசியா முழு வதும் ஒரு மோசமான அரசியல் செய்தியாகும் என்று  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.