states

ஊழல் புகார்: புதுவை பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி,ஆக. 2-  ஊழல் புகாருக்கு உள்ளான புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை  உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 1985 ஆம் ஆண்டு காலாப்பட்டில்  நிறுவப்பட்ட பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் நாட்டின் உயர்கல்வி வரைபடத்தில் தனக்கென  ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு 6 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இந்த பல்கலைக் கழகத்துடன் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நற்பெய ருக்கு கடந்த நவம்பர் 2017 இல் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, தில்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை  பேராசிரியராக பணியாற்றிய குர்மீத் சிங் நியமிக்கப்பட்டதிலிருந்து களங்கம் ஏற்பட்டி ருக்கிறது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற ஊழலில், ஊழல் செய்தவர்களிடம் பெருந்தொகையை லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு கைமாறாக, நிர்வாக ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மையத்தின்  இயக்குநராக செயல்பட்டு வந்த பேராசிரியர் ஹரிஹரன் ரூபாய் பல கோடிக்கு போலி ரசீதுகள் தயார் செய்து  ஊழல் செய்து வந்துள்ளார். இந்த ஊழல்களை கண்டுபிடித்த பல்கலைக்கழகத்தின் உள்ளிருப்பு தணிக்கை  அதிகாரி, பேராசிரியர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை வேந்தர் குர்மீத் சிங்க்கிற்கு பரிந்துரைத்துள்ளார். ஆனால், ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்காமல், நிர்வாக  ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ரூ. 50 லட்சம்  லஞ்சமாக பெற்றுள்ளார். இந்த ஊழல் சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், துணைவேந்தர் குர்மீத் சிங், பொறுப்பு நிதி  அதிகாரி லாசர்  மற்றும் பேராசிரியர் ஹரிஹரன்  மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐயிடம் புகார் அளித்தது.

 மேலும், புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் ஊழல் விவகாரம் குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளருமான அ. ஆனந்த்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆனந்த் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு  உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை  வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், “பல்வேறு ஊழலில் ஈடுபட்ட புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்  சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய  வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் ஊழல் புகார் துணைவேந்தர் பங்கேற்க அனு மதிக்க கூடாது என்றும் கடந்த 2017 முதல் இது வரை நடைபெற்ற கட்டுமான பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து  அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மாணவர் - வாலிபர் சங்கங்கள் வேண்டுகோள்!

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர்                                 சொ. பிரவீன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ. ஆனந்த் இருவரும் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊழலில் ஈடுபட்ட புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மாநிலக் குழுக்கள் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், அனைத்து மாணவர், வாலிபர் அமைப்புகள் மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.