சென்னை, ஆக.6- சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 5 நாட்கள் பயணத்துக்குப்பின் நிலவுக்கு அருகே விண்கலம் சென்றது. இதையடுத்து விண்கலத்தை நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக ஆகஸ்ட் 6 இரவு 11 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.