states

போட்டித் தேர்வு: யூடியூப் ஏகலைவர்கள்... - ஹரி

போட்டித் தேர்வுகளுக்கு எப்படித்  தயாராகலாம் என்று கேட்க  வருபவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோருடன்தான் வருகிறார்கள்.  அதிலும் பலர், தங்களது பெற்றோர்க ளால்தான் அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி ஒரு தாயால் அழைத்து வரப்பட்ட வர் போட்டித்தேர்வு வழிகாட்டியின் முன்னால்  அமர்ந்தார்.  வழிகாட்டி கேட்கத் தொடங்கும் முன்பாக, தேர்வரே கேட்கிறார். “தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. என்னால் தேர்ச்சி பெற முடி யுமா?” தன்னை ஆச்சரியப்படுத்த நினைத்தி ருக்கலாமோ என்று வழிகாட்டிக்குத் தோன்றியது.  அதைக் கண்டுகொள்ளாமல், “உங்கள் கணித அறிவு எப்படி” என்றார்.   “ரொம்ப நல்லாப் போடுவேன்”  Reasoning (காரணம் அறிதல்) பற்றிக் கேட்டபோது,  “அதுவும் நல்லா வரும்” என்றார்.  ஆங்கிலம் எப்படி என்றபோது, “I shall excel, strong in basics”

“நடப்பு நிகழ்வுகள்..” என்று கேட்டு முடிப்ப தற்கு முன்பாகவே “ஒண்ணுமே தெரியாது. முட்டைதான் கிடைக்கும்” என்று சொல்லிக் கொண்டே கைகளால் பூஜ்யம் போட்டும் காட்டி னார். தேர்வுத்தேதிக்கு ஒரு மாத காலம் என்பது மேலும் 15 நாட்களுக்குத் தள்ளிப் போனது. அந்தத் தேர்வர் வெற்றி பெற்று வேலையில் அமர்ந்தார். தன்னைப் பற்றிய மதிப்பீட்டை அவர் சரியாக செய்திருந்தார். 45 நாட்களில் நடப்பு  நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். சில தேர்வர்கள் எதற்காக விண்ணப்பிக்கிறோம் என்ற கவனம் கூட இல்லாமல் செய்கிறார்கள்.  இதெல்லாம் கேக்குறாங்கப்பா..!! வங்கித் தேர்வொன்று நடக்கிறது. வெளி யில் பெற்றோர்களில் பலர் நகங்களைக் கடித்துத் கடித்துத் துப்பியவாறு காத்திருக்கி றார்கள். மணி அடித்தது. அவரவர் மகன் களின், மகள்களின் முகங்களைத் தேடி எட்டி, எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விறு, விறு என்று முதல் பத்து பேரில் ஒருவராக வந்த ஒரு பெண் தேர்வர் தனது அப்பாவைத் தேடி கண்களை ஓட்டினார். அவரைப் பார்த்தவுடன் வேகமாக அவரருகே சென்று, “அப்பா... வாப்பா போகலாம். ரீசனிங்லாம் கேட்டுருக்காங்க” என்றவாறே இழுத்துச் சென்றார்.. தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன என்றே கவனிக்காமல் விட்டிருக்கிறார்.  ஏகலைவன் போலக் கற்றுக் கொண்டு விடலாம் என்ற முயற்சிகளும் உள்ளன. யூடியூப் பார்த்து மட்டுமே நம்மால் தேர்ச்சி பெற்றுவிட முடியும் என்று நம்புபவர்கள் உள்ளனர். அடிப்படையானவற்றை மறந்து போகாமல் இருந்தவர்களில் சிலர், அப்படித் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். 

பயிற்சி மையங்கள்

இங்குதான் பயிற்சி மையங்களைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன. பயிற்சி மையங்களுக்குப் போகாமல் தேர்ச்சி பெற முடியாதா..? எந்த பயிற்சி மையத்திற்குச் செல்வது..? வெளியூரில் போய்தான் படிக்க முடியுமா..? இந்த வினாக்களுக்கு எல்லாம் ஆம் என்றும், இல்லை என்றும் விடைகள் கிடைக்கும். அத்தகைய விடைகளுக்கு, கேட்கும் நபர், கேட்கப்படும் நபர், கேட்கும் இடம், கேட்கப்படும் இடம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கும்.  பயிற்சி மையங்கள் அவசியம். பயிற்சி மையங்கள் என்றவுடன் ஆயிரக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க வேண்டிய இடங்கள் என்று மட்டும் தோன்ற வேண்டியதில்லை. குழுவாக அமர்ந்து படிப்பது, நூலகத்தைப் பயன்படுத்துவது, கட்டணமில்லாமல் நடக்கும் பயிற்சி மையங்களுக்குச் செல்வது,  யாராவது ஒரு வழிகாட்டியிடம் தொடர்ந்து ஆலோசனைகள் கேட்பது, பயிற்சித் தேர்வு களில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் பயிற்சி மையங்கள்தான்.  கட்டணம் வாங்குவது அல்லது வாங்காத பயிற்சி மையங்களில் பெரும்பாலானவை எந்திரத்தனத்தோடுதான் இயங்குகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் கட்டணம் வாங்கிப் பாடங்களை எடுப்பார்கள்.. போட்டித் தேர்வு களுக்கான கணிதம், காரணம் அறிதல், மொழிப்பாடம், நடப்பு நிகழ்வுகள் மற்றும்  பொது அறிவு என்றெல்லாம் பாடம் நடத்த  மாட்டார்கள். ஒரே நேரத்தில் ரயில்வே தேர்வுக்கும், எஸ்.எஸ்.சி. தேர்வுக்கும் பணம்  கட்டிப் படித்தவர்கள், படிப்பவர்கள் இருக்கி றார்கள். இதில் மற்றொரு பிரச்சனையும் உள்ளது. தனித்தனியாக வகுப்புகள் போட்டால்தான் பயிற்சி மையங்களை நம்பக் கூடிய பெற்றோர்களும், தேர்வர்களும் இருக்கிறார்கள்.

இலவசமா?

பயிற்சி மையங்கள் என்றவுடன் நம்மால்  எப்படிக் கட்டணம் கட்ட முடியும் என்ற எண்ணம் உதிப்பதைத் தவிர்க்க இயலாது.   இலவசம் என்றாலே பலருக்கும் அங்கு தரம் இருக்காது என்று பேசத் தொடங்குவதற்கு முன்பே கழித்துக் கட்டி விடுவார்கள். “எந்த விதக் கட்டணமும் வாங்காமல் கல்வியைத் தர வேண்டும்” என்று ஒரு தன்னார்வலர் தனது நண்பர்களிடம் சொன்னபோது, “கூட்டம்,  கூட்டமாக வருவார்கள்... ஆனால் தொடர்ந்து  வர மாட்டார்கள்... இலவசமாகக் கொடுக்கக் கூடாது. குறைந்தபட்ச கட்டணமாவது வைக்க வேண்டும்” என்றார்கள்.  நண்பர்களின் ஆலோசனையைத் தட்ட முடியாத அவர், கட்டணம் வாங்கிக் கொண்டு  வகுப்புகளை நடத்தும் மூன்று பயிற்சி மையங்களுக்குச் சென்று சிறிய ஆய்வு நடத்தினார். 100 பேர் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் இணைந்தால், அவர்களில் கடைசி வரை வகுப்புகளுக்கு வருபவர்கள் 25 முதல் 30 பேர் வரைதான் என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியைத் தரவில்லை. மாறாக, உற்சாகத்தைத் தந்தது. வராமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இலவசம் என்பது மட்டும் காரண மாக இருக்காது என்று அவர் உறுதியாக நம்பினார். நண்பர்களும். பண்ணலாம் என்று தலையாட்டினர்.

மெட்டீரியல் தருவீங்களா?

தேர்வர்களில் பலரும் “மெட்டீரியல் தரு வீர்களா” என்றுதான் முதல் வகுப்பில் கேட்பார்கள். “கிடா எப்போ வெட்டுவீங்க” என்ற கவுண்டமணியின் வசனம்தான் நினைவுக்கு வரும். சிலரோ, அது கிடைத்து விட்டால், அப்புறமாக வீட்டிலேயே அமர்ந்து  படித்து விடலாம் என்ற கணக்கில் இறங்கு வார்கள். தேர்வர் ஒருவர், 21 ஆயிரம் வினா-விடை இருந்த வழிகாட்டி நூலை ஆறு மாதங்கள் படித்துவிட்டு, நாம் படித்ததில் இருந்து ஒரு வினா கூட வரவில்லையே என்று தேர்வு மையத்திற்குள் தலையில் கை வைத்து அமர்ந்ததும் நடந்துள்ளது.  பாடத்திட்டத்தைத் தாண்டியதாக இருந்தாலும் அடிப்படை அம்சங்களில் புரிதல் இல்லாமல் படிப்பது பலனளிக்காது என்பதைச் சொல்லக்கூடிய பயிற்சி மையங்க ளில் பயில்பவர்கள் விரைவில் தேர்ச்சி பெறு கிறார்கள். இதைச் சொல்லக்கூடிய வழி காட்டிதான் நாம் இப்பகுதியில் முதலில் பேசிய  தேர்வருக்குக் கிடைத்திருந்தார்.  வழிகாட்டிகளை மிரளவைத்த சம்பவங்க ளும் உண்டு..  முதல் வகுப்பு நிறை வின்போது, சார்.. ஒரு 200  வினாக்களச் சொல்லி, அதற்கான விடைகள விளக்கு வீங்கன்னு நெனச்சேன் என்ற தேர்வரைப் பார்த்து வழிகாட்டி மிரண்டுதான் போனார்.   உட்கார வைத்து, பாடத்திட்டம், பாடங்கள், தேர்வு முறை, புரிதலோடு படிப்பது, பழைய வினாக்கள், பயிற்சித் தேர்வுகள் என்று தனி யாக முக்கால் மணிநேரம் பாடம் எடுத்தார். தான் எழுதிய மூன்றாவது தேர்விலேயே அரசுப்பணி கிடைத்தது என்ற தகவல் அந்தத் தேர்வர்வரிடமிருந்து வழிகாட்டிக்கு வந்தது. அவருக்கு அப்படித் தகவல் கிடைப்பது முதன்முறையல்ல.