புதுச்சேரி, ஆக.23- கட்டிடத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு கூப்பன் ரூ. 5000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிட தொழிலாளர் நல வாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 30 கடைகள் மட்டும் தான் திறக்கப்படவில்லை. அந்த அந்த பகுதிகளில் அங்கன்வாடிகள் மூலம் இலவச அரிசியை சிரமமின்றி பெறலாம். மானியத்தில் பொருட்கள் கார்பெட் கூட்டுறவு நிறுவனம் மூலம் தீபாவளியை முன்னிட்டு மானிய விலையில் 10 பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை குடும்ப அட்டைகளை கொண்டு தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் ரூ.500 மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக அரசின் வடி சாராய ஆலையின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு லாப ஈவுத் தொகையை ரூ.1.45 கோடிக்கான காசோலையை முதல்வர் ரங்கசாமியிடம் ஆலையின் அதிகாரிகள் வழங்கினர். முதல்வருடன் சட்டப்பேரவை தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். கட்டுமானத் தொழி லாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.