states

வேங்கைவயல் : 4 சிறார்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 21- வேங்கைவயல் பட்டியல் சமூகக் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்ப வத்தில், மரபணு பரிசோதனைக்காக 4  சிறார்களிடம் ரத்த மாதிரிகள் வெள்ளிக் கிழமை சேகரிக்கப்பட்டன. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட சிறார்  பாதுகாப்புக் குழும உறுப்பினர்கள் மற்றும்  வெள்ளனூர் காவல் நிலையத்தின் சிறார் நேயக் காவலர் ஆகியோர் முன்னிலையில், ரத்த மாதிரிகளை அரசு மருத்துவர்கள் எடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியல் சமூக குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த  டிச. 26 அன்று தெரியவந்தது. இச்சம்பவம்  தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார், தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணு வையும், இதுவரை விசாரணை மேற்கொள்ளப் பட்டோரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்து, 21 பேரிடம் மரபணு பரிசோதனையை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 4 சிறார்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட  எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் அனுமதி கோரினர். சிறார்களாக இருப்பதால், மாவட்ட சிறார் பாதுகாப்புக் குழுமத்தினர் மற்றும் வெள்ளனூர் காவல் நிலையத்தில் பணி யாற்றும் சிறார் நேயக் காவலர் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணியை மேற் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, குறிப்பிட்ட 4 சிறார்களும் (இறையூர்-3 பேர், வேங்கைவயல்-1) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனர். அவர்களுடன் சிறார் பாது காப்புக் குழும உறுப்பினர்கள் இருவர், சிறார் நேயக் காவலர் ஒருவரும் வந்திருந்தார். இவர்கள் முன்னிலையில், சிறார்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த  மாதிரிகள் சென்னையிலுள்ள தடயவியல் பரி சோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.