states

img

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 நாள்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் உபரி நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கபினி அணையில் இருந்து 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும் நீர் திறப்பு வினாடிக்கு 651 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.