திருநெல்வேலி.அக்.22- நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களின் தடகளப் போட்டிகளை அக்டோபர் 22 அன்று சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதன்பின்னர் சபாநாயகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் அதிமுகவுக்குத்தான் இரண்டு மடங்கு நேரம் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்கள் கேள்வி நேரம் தொடங்கியதுமே கூச்சலிட்டுவிட்டு வெளிநடப்பு செய்துவிடுகிறார்கள். சட்டமன்றத்தில் கேள்வி நேரம், முக்கிய விவாதம், 110 விதியின் கீழான அறிவிப்புகள் நேரலை செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் தவறான வார்த்தைகள் பேசிவிட்டால் பெரும் பிரச்சனையாக உருவாகிவிடும். சட்டமன்றத்தில் பேசும்போது சபை அனுமதிக்காத வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதையும் கேட்டறிந்து விரைவில் அதுகுறித்தான அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.