states

உலகின் 2-ஆவது பெரும் பணக்காரரானார் அதானி

புதுதில்லி, செப்.16-   ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தினார் அதானி குழுமத் தலைவரும், இந்தியருமான கெளதம் அதானி. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கெளதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டி யலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது.  அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பசுமை எனர்ஜி, அதானி  துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர்  என 4.97 முதல் 3.45 சதவீதம் வரை அவரது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஏற்றம் வியாழனன்று நடந்தது. அதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி உயர்ந்துள் ளது. அதனால் அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப் பட்டியலில் எலான் மஸ்க் சுமார் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் பெசோஸ் முறையே மூன்று  மற்றும் நான்காவது இடத்திலும், பில்கேட்ஸ், வாரன் பஃபெட், முகேஷ் அம்பானி, லேரி பேஜ், செர்ஜி ப்ரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆகஸ்ட் வாக்கில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடம்பிடித்தபோது அந்த இடத்தை எட்டிய முதல் ஆசியர் என அறியப்பட்டார்.

;