சென்னை, ஜன.21- டெல்டா மாவட்டங்களில் 17 விழுக்காடு ஈரப்பதத்துடன் நெல் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் மழை மற்றும் பனி மூட்டத்தைக் கணக்கில் கொண்டு 22 சதவிகித ஈரப்பதத்துடன் கூடிய நெல்லையும் கொள்முதல் செய்திட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கியதாலும் இப்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. வானம் மேகமூட்டத்துடன், தொடர்ந்து பனிப்பொழிவுடன் உள்ளதால் விவசாயிகள் நெல்லை உலரவைக்க சிரமப்படுகின்றனர். இதனால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 விழுக்காடு ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து, 22 விழுக்காடு ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், ஒன்றிய அரசின் உணவுத்துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று ஆய்வுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் உணவுத்துறையின் கீழ் செயல்படும் சேமிப்பு, ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த 2 உதவி இயக்குநர்கள், 2 தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட குழு தமிழகம் வர உள்ளது. தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசின் உணவு அமைச்சகத்திற்கு அவர்கள் சமர்ப்பிக்க உள்ளனர்.