states

img

சின்னக் குருவியின் சீற்றம் - பழனி.சோ.முத்துமாணிக்கம்

எடுப்பு
சின்னக் குருவியின் வண்ணச் சிறகுகள்
    படபடத்தன; உடல் கிடுகிடுத்தது!
என்ன உறுதியில் இருப்போம் என்றுளம்
    துடிதுடித்தது; வாழ்வில் இடி இடித்தது!
தொடுப்பு
சித்திரக் கூட்டினைக் கட்டிடவோ ?—இல்லை
    சீரழிந்த படிநான் சுற்றிடவோ ?----கொலைப்
பித்துப் பிடித்த மாந்தர்களின் ---போர்ப்
    பேரழி வாலேதான் செத்திடவோ ?

வித்தகம் என்னென்ன செய்கின்றானே !—ஆனால்
    விரிந்த நெஞ்சின்றி மாய்கின்றானே !—அடப் 
புத்தகம் ஆயிரம் புரட்டியென்ன ?—இந்தப் 
    புவியு ருண்டையைத் தீய்க்கின்றானே !

வான வெளிகளை வெல்லுகின்றான் –அந்த
    வட்ட நிலாவையும் புல்லுகின்றான்--அழிவு
ஈனக் குண்டுகள் ஏன்படைத்தான் ?—இங்கே
    இறக்கவா? வந்தோம்! ஏன்மறந்தான்?

நச்சு வாய்வுகள் கிருமிகளை இந்த
    நாநிலம் போருக்குக் கண்டதுண்டா? —இங்கே
மிச்சம் மீந்திட்ட வெட்டவெளி---எல்லாம்
    மெய்யாகக் கெட்டபின் வாழ்க்கையுண்டா?

எத்துணை அறிவியல் சாகசங்கள்!—ஆனால்
    எங்கெங்கு நோக்கினும் பஞ்சமம்மா!—வாய்
கத்தவும் முடியாமல் சாகின்றானே! அதைக்
    களையெ டுக்கவும் ஆளில்லையே!
முடிப்பு
மூட அணுப்போரை நிறுத்துங்கையா! –கொஞ்சம்
    மூச்சு விடவழி செய்யுங்கையா! –நாம்
தேடிய அறிவெல்லாம் அழியத்தானா? இதைத்
    தேருங்கள் பூக்கட்டும் பூமி ஐயா!