states

நீர்வரத்து அதிகரிப்பு 138 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு

தேனி, செப்.11- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியது .  கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஞாயிறன்று  காலை நிலவரப்படி  அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு பின்னர் 142 அடிவரை தேக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் .அணைக்கு  2534 கனஅடி நீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.  வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70.57 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு 2286 கன அடி நீர் வருகிறது. மதுரை  மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கன அடி நீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  பெரியாறு 10.4, தேக்கடி 9.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

குளிக்கத் தடை 

கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 31 ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு  12 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.  ஹைவேவிஸ் மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள 5 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியது.  இதனால் தூவானம், இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

;