states

நம்பிக்கையோடு தானிருக்கோம்! - கடமலை சி.கணேசன்

வேலையெல்லாம் முடித்துவிட்டு
மறுநாள் வேலைக்கு
காத்துக்கிடந்த எங்களுக்குத் தெரியாது…
இப்படியோர்
மேகவெடிப்பு
இத்தனை உயிர்கள் கேட்குமென்று…

இறந்து போனவர்களுக்கு
இனி
எதிர்காலம் தெரியாது…

முடிந்தவரை
இருப்பவர்களைக் காப்பாற்றிவிட்டோம்…
மனித நேயத்தோடு

நாங்கள்
உயிர் பிழைத்த
நம்பிக்கையோடுதானிருக்கோம்
விரைவில் மீள்வோமென…

நீங்களோ
எதுவும் செய்யவில்லை
செய்யப் போவதுமில்லை…!

போராடிப் பிழைத்த
எங்களை
வரலாறும் வாழ்த்தும்…

எப்போதோ ரோம் நகரம்
தீயில் எரிந்தபோது
பிடில் வாசித்த நீரோவை
இன்னும் காறித் துப்புகிறது
காலம்…!

தேசத்தின்
உயர்பதவியில் நீங்கள்
உதவிடும் அதிகாரத்திலும் நீங்கள்…!
தேசத்தின் பிள்ளைகள் நாங்கள்..
கொற்கையின் அழிவையும்,
வயநாட்டின் துயரையும்
திரும்பிக்கூடப் பார்க்காத உங்களை
என்ன செய்ய காத்திருக்கோ
காலம்?